Published : 23 Feb 2019 08:44 AM
Last Updated : 23 Feb 2019 08:44 AM

அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: தம்பிதுரை நம்பிக்கை

2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தொடர்ந்து மேலும் சிறப்பாக மக்களுக்கு நல்லாட்சி வழங்க, ஏழுமலையானை வேண்டிக்கொண்டேன் என்று மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை நேற்று திருமலையில் கூறினார்.

மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை நேற்று காலை திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.இவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் தரிசன ஏற்பாடு செய்து, பின்னர், ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். இதே சமயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் ஏழுமலையானை தரிசித்தார். இவர்கள் இருவரும் சில மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் இருவரும் கோயிலுக்கு வெளியே வந்தனர். அப்போது மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது: நானும் அமைச்சர் பியூஷ் கோயலும் நல்ல நண்பர்கள். மாநில வளர்ச்சிக்காக இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாபெரும் வெற்றி பெற வேண்டுமென எல்லாம் வல்ல ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டேன். முதல்வரும், துணை முதல்வரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த பாதையில் மக்களுக்கு சிறப்பாக தொண்டாற்றி வருகின்றனர். இது தொடர மத்திய அரசின்துணை அவசியம்.

ஆதலால், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, தொடர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கும். இவ்வாறு மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார். முன்னதாக நேற்று முன் தினம் இவர் வாயுத்தலமான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சென்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடக்கத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார் தம்பிதுரை. இந்நிலையில் கூட்டணியை ஏற்றுக்கொண்டு பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x