Published : 20 Feb 2019 10:04 AM
Last Updated : 20 Feb 2019 10:04 AM

கடலூரில் குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

கடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு பாவேஷ்கண்ணா (12), ரதிஷ்கண்ணா (8) என இரு மகன்கள் இருந்தனர். கடந்த ஓராண்டாக கணவன், மனைவிக்குள் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சிவசங்கரி, மதிவாணன் கடைக்கு சென்ற பின்னர் நேற்று முன்தினம் இரவு தனது இரு மகன்களையும் கழுத்தை நெறித்து கொலை செய்து, அவர்களின் உடலுக்கு மலர் தூவி அழுதுள்ளார்.

சிறிது நேரத்தில் சிவசங்கரியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையில் வீட்டிற்கு வந்த மதிவாணன் சிவசங்கரி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்சியடைந்தார். இரு மகன்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடத்தப்பட்டிருந்தனர்.

சிவசங்கரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக காவல்துறை மற்றும் உறவினர்கள், அம்மா, தங்கை, மாமா என தனித்தனியாக 4 கடிதங்களை எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், “என் கணவர் மிகவும் பொறுமையானவர். அவருக்கு நான் அதிகளவு தொந்தரவு கொடுத்துவிட்டேன். எனவே நான் சாகப்போகிறேன். கணவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதால் என் இரு மகன்களையும் கூடவே எடுத்துச் செல்கிறேன்.

என் சாவுக்கும், எனது மகன்கள் சாவுக்கும் யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலை உடல் கூறாய்வு செய்ய வேண்டும்” இவ்வாறு எழுதி வைத்திருந்தார்.

தகவலறிந்த கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x