Published : 11 Feb 2019 04:45 PM
Last Updated : 11 Feb 2019 04:45 PM

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைகோரும் வழக்கு: தமிழக அரசு, ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, ஆறுமுகசாமி ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனை சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார்  கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், ''ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கான காரணம் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக ஆணையம் அமைக்கப்பட்டது,  

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா, போதுமானதா என்பது தொடர்பாக ஆணையம் விசாரிக்கிறது. ஆனால் தங்கள் தரப்பில் ஆஜராகும் மருத்துவர்களின் விளக்கத்தைப் புரிந்து பதிவு செய்துகொள்ள 21 துறைகளைச் சார்ந்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவையும் ஆணையம் நிராகரித்துவிட்டது.

அரசு மருத்துவர்களை குறுக்கு விசாரணை செய்ய தங்களை அனுமதிக்கவில்லை, தங்கள் மருத்துவர்கள், பணியாளர்களை ஆஜராகும்போது அவர்களின் பணி நேரத்தை கருத்தில் கொள்ளாமல் காக்க வைக்கப்படுகிறார்கள். ஆணையமே விசாரணையை ஒத்திவைக்கிறது'' என குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

தங்கள் மருத்துவர்களை விசாரிக்க வேண்டுமென்றால் 21 மருத்துவர்கள் கொண்டு குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு தடை விதிக்கவும் அப்போலோ  சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோன்று, அப்போலோ அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்த தன்னிச்சையாக செயல்படக்கூடிய மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அதுவரை சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளில் தமிழக பொதுத்துறை, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் இன்று(பிப். 11) நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அப்போலோ மருத்துவமனை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசு மருத்துவர்களை முறையாக விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை என்றும், 21 துறைகளை சார்ந்த மருத்துவர்களை கொண்ட குழுவை அமைக்காமல் விசாரணையைத் தொடரக்கூடாது என்றும் வாதிட்டார்.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையம் அதில் கவனம் செலுத்தாமல், சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசாரணை நடைமுறையை மேற்கொண்டுள்ளதால், சிகிச்சை தொடர்பாக விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ''ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே ஆணையம் செல்கிறது என்றும், அப்போலோவிற்கு அதன் கருத்துக்களைச் சொல்ல ஒவ்வொரு கட்டத்திலும் உரிய அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது'' எனவும் விளக்கம் அளித்தார்.

மேலும், ''ஆணையத்தின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்த பிறகு, அதில் உள்ள பரிந்துரைகளைப் பொறுத்து அப்போலோ வழக்கு தொடரலாம் என்றும், விசாரணையின் தொடக்க நிலையில் தொடரப்பட்ட வழக்கை அனுமதிக்கக்கூடாது'' என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், ''மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் விசாரிக்க அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அரசின் விளக்கத்தை அளிக்க அவகாசம் வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.

அனைத்து தரப்பு விளக்கத்தையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x