Published : 11 Feb 2019 03:37 PM
Last Updated : 11 Feb 2019 03:37 PM

முல்லைப் பெரியாறில் தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் புதிய அணை இல்லை: உச்ச நீதிமன்றத்தில் கேரளா உறுதி

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என கேரள அரசு உத்தரவாதம் அளித்ததை அடுத்து தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இது சம்பந்தமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், முல்லைப் பெரியாறு அணையில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும், நில அதிர்வு உள்ளிட்ட காலங்களில் முல்லைப்பெரியாறு அணையில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் புதிய அணை கட்ட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சிறப்பு குழு ஒன்றை அமைத்து முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தது. அப்பொழுது முல்லைப் பெரியாறு அணை போதிய பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.

கேரள அரசு முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் உச்சநீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது முல்லைப் பெரியாறு அணை புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதால் புதிய அணை தேவை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

ஆனால் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, இதற்கான முழுமையான இறுதி அறிக்கையை (DPR) தயார் செய்ய மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில தமிழக அரசு கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது. அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கேரள அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் கேரள அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “தற்போது எடுக்கப்படும் முயற்சிஅணையை கட்டுவதற்கான ஒப்புதல் இல்லை, ஆய்வறிக்கை தயாரிக்க தரவுகளை திரட்டும் பணியே மேற்கொள்ளப்பட்டுள்ளது, புதிய அணை கட்டும் பணி மேற்கொள்ளவில்லை, ஆய்வறிக்கை தயாரிக்கவே தரவுகளை திரட்டி வருகிறோம்.” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறிக்கிட்ட  நீதிபதிகள் அமர்வு, “இந்த வழக்கில் அணை கட்டும்பணி நடக்கவில்லை, மேலும் அப்பகுதியில் DPR தயாரிப்பதற்கான தரவுகளையே திரட்டி வருகின்றனர், எனவே இது உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய செயல் இல்லையே, எனவே இதில் நீதிமன்ற அவமதிப்பு எங்கே நடந்துள்ளது?” என  கேள்வி எழுப்பினர்.

ஆகவே மத்திய அரசு கேரளாவிற்கு DPR ஆய்வறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதியை தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு சார்பில், “ஆய்வறிக்கை தயாரிப்பதன் நோக்கம் புதிய அணை கட்டுவதே, மேலும் இந்த விவகாரத்தில் தரவுகளை திரட்டி ஆய்வறிக்கை தயாரிப்பதே நீதிமன்ற அவமதிப்பு தான்” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறிக்கிட்ட கேரள அரசு தரப்பு, தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் தயார் என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x