Published : 09 Feb 2019 04:11 PM
Last Updated : 09 Feb 2019 04:11 PM

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவை தான் முடிவு செய்யும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யவும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் இடைநிற்றல் விகிதம் அதிகமாகும் எனவும், ஏழை மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்திற்கு உட்பட்ட குள்ளாம்பாளையத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், "5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்றதிட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. விரும்பினால் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. இது குறித்து முதல்வர், அமைச்சர்கள் கலந்தாலோசித்து அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும்" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x