Published : 09 Feb 2019 03:21 PM
Last Updated : 09 Feb 2019 03:21 PM

ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும்: அப்போலோ மருத்துவமனை வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் தொடர்ந்துள்ள வழக்கில், ''ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கான காரணம் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா, போதுமானதா என்பது தொடர்பாக ஆணையம் விசாரிக்கிறது. ஆனால் எங்கள் தரப்பில் ஆஜராகும் மருத்துவர்களின் விளக்கத்தைப் புரிந்து பதிவு செய்துகொள்ள 21 துறைகளைச் சார்ந்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைக்கக் கோரி நாங்கள் தாக்கல் செய்த மனுவை ஆறுமுகசாமி ஆணையம் நிராகரித்துவிட்டது.

அரசு மருத்துவர்களை குறுக்கு விசாரணை செய்ய எங்களை அனுமதிக்கவில்லை. எங்கள் மருத்துவர்கள், பணியாளர்கள் ஆஜராகும்போது அவர்களின் பணி நேரத்தைக் கருத்தில் கொள்ளாமல் காக்க வைக்கிறது, ஆணையமே விசாரணையை ஒத்திவைக்கிறது.

எங்கள் மருத்துவர்களை விசாரிக்க வேண்டுமென்றால் 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கில் தமிழக பொதுத்துறை, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு வரும் பிப்.11-ம் தேதி (திங்கட்கிழமை) நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதேபோன்று அப்போலோ அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்த தன்னிச்சையாக செயல்படக்கூடிய மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அதுவரை சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்குத் தடை  விதிக்க வேண்டும் என்றும் மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x