Published : 03 Feb 2019 04:54 PM
Last Updated : 03 Feb 2019 04:54 PM

வருகிற தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்வதன் மூலம் மத்திய பாஜக ஆட்சிக்கு ஏஜெண்டாகச் செயல்படும் அதிமுகவுக்கு முடிவு கட்ட வேண்டும்: டிடிவி தினகரன்

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு ஏஜெண்டாகச் செயல்படும் தமிழக அதிமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 

திருச்சி மாவட்டத்தில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் பங்கேற்று வரும் தினகரன் பொன்மலை கீழக்கல்கண்டார்கோட்டை பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

 

 “தமிழக மாணவ-மாணவிகளை பாதிக்கக்கூடிய நீட்தேர்வு வேண்டாம் என்று ஜெயலலிதா நிராகரித்தார். இந்த தேர்வு மூலம் கிராமப் புற மாணவ-மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் சேருவது குதிரை கொம்பாக இருக்கிறது. ஆனால் தற்போது மத்தியில் ஆளுகிறவர்கள் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது.

 

மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒன்றுமே செய்யாதவர்கள், தற்போது இடைக்கால பட்ஜெட்டை அறிவித்துள்ளனர்கள். இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கினார்கள்.

 

ஆனால் அவர்களுடைய வாக்குறுதிகளை தமிழக மக்கள் நம்பாமல் பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளிலும் ஜெயலலிதாவுக்கு வெற்றியை வழங்கினார்கள். ஆனால் தற்போது இவர்கள் மத்திய அரசின் கிளை அலுவலகம் போல் செயல்பட்டு வருகிறார்கள். வருகிற தேர்தலில் இவர்களை டெபாசிட் இழக்க செய்வதன் மூலம் மத்திய அரசுக்கும், அவர்களுடைய ஏஜெண்டாக செயல்படும் தமிழக அரசுக்கும் முடிவு கட்டவேண்டும்.

 

துரோகம் செய்தவர்களுக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்துக்கு என்ன நல்ல திட்டங்கள் கிடைத்தது என்று எண்ணி பார்க்க வேண்டும்.

 

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள். அதைபோல 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றிபெற வேண்டும். வருகிற மக்களவைத் தேர்தலோடு 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் வருகிறது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று அனைவருக்குமான இயக்கமாக செயல்படும்” என்றார் டிடிவி தினகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x