Published : 28 Jan 2019 01:20 PM
Last Updated : 28 Jan 2019 01:20 PM
பிளாஸ்டிக் அறவே இல்லாமல் இயற்கையான முறையில் மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் நாப்கினை உருவாக்கி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.எச்டி மாணவி ப்ரீத்தி ராமதாஸ் சாதனை படைத்துள்ளார்
இந்த நாப்கின்கள் ஒரு மாதத்துக்குள்ளாக மட்கும் தன்மை கொண்டவை. இதுகுறித்துப் பேசிய ப்ரீத்தி, ''இந்த நாப்கின்கள் செல்லுலோஸை அடிப்படையாகக் கொண்டவை. இது மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பெண்களுக்கு பாக்டீரியா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் இது செயலாற்றுகிறது.
மிகவும் மெலிதாக இருக்கும் இந்த நாப்கின், 3 மி.மீ. தடிமன் கொண்டது. தன்னுடைய எடையைக் காட்டிலும் 1,700% அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.
தாவரங்களின் மூலம் கிடைக்கும் பாலிமர்கள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கமாகக் கடைகளில் கிடைக்கும் நாப்கின்களிலும் டயாப்பர்களிலும் பிளாஸ்டிக் இருக்கும். இதனால் அவை மட்க அதிக காலம் பிடிக்கும். காகித எச்சத்தில் இருந்து உருவாக்கப்படும் செல்லுலோஸ் கூழ் அதில் இருக்கும். அத்துடன் அவற்றை வெள்ளையாக்க குளோரின் பயன்படுத்தப்படும். அவை நச்சுகளை வெளியிடுபவை.
மேலும் வழக்கமான நாப்கின்கள், பிளாஸ்டிக் மூலம் கிடைக்கும் பாலிபுரொப்பிலைனால் உருவான ஹைட்ரோபோபிக் தாளால் சுற்றப்பட்டிருக்கும். அதன்மூலம் உடல் அரிப்புகள் ஏற்படும்.
இயற்கை ஆர்வம்
எப்போதுமே இயற்கையின் மீது எனக்கு அலாதியான ஆர்வம் உண்டு. பி.எச்டி குறித்து யோசிக்கும்போது நாம் உருவாக்கும் செயல்திட்டம், பெண்களுக்குப் பயன்பட வேண்டும். அது இயற்கையைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் விளைவுதான் இந்த இயற்கை நாப்கின்.
இது சிப்பெட்டிலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களிலும் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது'' என்கிறார் ப்ரீத்தி ராமதாஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT