Published : 23 Jan 2019 11:53 AM
Last Updated : 23 Jan 2019 11:53 AM

பாஜக - அதிமுக கூட்டணியா? - ராம்தாஸ் அத்வாலே கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

பாஜக-அதிமுக கூட்டணி என்ற ராம்தாஸ் அத்வாலேவின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும், மகாராஷ்டிர மாநிலத்தின் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே "வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும். திமுக அதிக கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கிறது.

அதனால், தமிழக மக்களுக்காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும். தினகரன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து சந்திக்க வேண்டும்.  ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்தது போன்று இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது தொடர்பாக தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். இணைந்த இரு அணிகளும் பாஜக கூட்டணியில் வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கும்" என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி குறித்த ராம்தாஸ் அத்வாலேவின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "பாஜகவும் அதிமுகவும் மிகப்பெரிய இயக்கங்கள். கூட்டணி குறித்த முடிவுகளை கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும். தனிப்பட்ட அமைச்சர் சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்து" என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x