Published : 22 Jan 2019 04:51 PM
Last Updated : 22 Jan 2019 04:51 PM

பேட்ட திரைப்படம் ஓடிய திரையரங்கில் புகை பிடித்ததால் தாக்குதல்: இளைஞர் உயிரிழந்த பரிதாபம்

'பேட்ட' திரைப்படம் ஓடிய திரையரங்கில் புகை பிடித்த இளைஞரை ஒருவர் தாக்கியதால், அந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை காளியம்மன் லே-அவுட்டைச் சேர்ந்தவர் தர்மராஜ் மகன் மணிகண்ட பிரபு (25). இவர் கடந்த 12-ம் தேதி உடுமலை லதாங்கி திரையரங்கில் 'பேட்ட' திரைப்படத்தின் மதியக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இடைவேளையின் போது மணிகண்டன் பிரபு ஆண்கள் கழிப்பறை சென்றார். அப்போது அவர் தலையில் காயம் ஏற்பட்டதால் வீட்டுக்குச் சென்றவர், அதன் பின் உடல் நிலை மேலும் நலிவடைய உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணிகண்டன் பிரபுவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக மணிகண்டன் பிரபுவின் தாய் செல்லம்மாள் உடுமலை போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில், திரையரங்கில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரித்தனர். சம்பவத்தன்று படம் பார்த்துக்கொண்டிருந்த மணிகண்டன் பிரபு திரையரங்குக்குள் புகை பிடித்துள்ளார். அப்போது அருகில் இருந்த உடுமலை மாரியம்மன் நகர் செல்வராஜ் மகன் திருமூர்த்தி தட்டிக்கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.

இதையடுத்து நடந்த பிரச்சினையில் மணிகண்டன் பிரபுவை திருமூர்த்தி தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் கடந்த 20-ம் தேதி இதை கொலை வழக்காகப் பதிந்து, திருமூர்த்தியை போலீஸார் கைது செய்தனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x