Published : 21 Jan 2019 10:51 AM
Last Updated : 21 Jan 2019 10:51 AM
தலைமைச் செயலக அலுவலகத்தில் கற்பூரம் கொளுத்துவது யாகம் வளர்ப்பதாகுமா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (திங்கள்கிழமை) நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜெயக்குமார், "திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் சந்தர்ப்பவாதம் முழுமையாகப் பொருந்தும். கடந்த கால வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் உற்றுநோக்கினால், 17 ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்துகொண்டு இரட்டை வேடம் கொண்டிருந்ததால், தமிழ்நாடு எந்த வளர்ச்சியையும் அடையவில்லை. மழை பெய்தால் சாயம் வெளுப்பது போல அவர்களின் இரட்டை வேடமும் வெளுத்துவிடும்.
சென்னையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துவிட்டு மேற்கு வங்கக் கூட்டத்தில் ஏன் ஸ்டாலின் அமைதியானார். தைரியம் இருந்தால் அங்கும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய வேண்டியது தானே? அதுதான் அவரின் இரட்டை வேடம். தேர்தலுக்குப் பின்பு அதுகுறித்துப் பேசலாம் என்கிறார்.
சந்தர்ப்பவாதிகளும், சந்தர்ப்பவாதமும் மக்களால் அடையாளம் காணப்பட்டு அரசியலில் இருந்து ஒதுக்கப்படும் நிலைமை ஏற்படும். சந்தர்ப்பவாதம் வெற்றி அடைந்ததாக வரலாறு இல்லை" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையடுத்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லையா எனவும், தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தப்பட்டதா எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "யாகம் வளர்ப்பதால் ஒருவர் முதல்வராக முடியுமா? யாகம் வளார்ப்பதாலேயே ஒருவர் முதல்வராக முடியாது. அவர் சொல்வதை சிறுபிள்ளைத்தனமாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
அலுவலகம் செப்பனிடப்பட்டு ஊதுபத்தி, கற்பூரம் கொளுத்தினால் அது யாகம் வளர்ப்பதா? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எவ்வளவோ சித்து விளையாட்டுகள் நடைபெற்றன. ஸ்டாலின் எவ்வளவோ குற்றச்சாட்டுகளை அடுக்கினார், எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கோரினார். இப்போது அலுவலகத்தில் கற்பூரம் கொளுத்தியதற்கும் சிபிஐ விசாரணை கேட்பார்" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT