Last Updated : 21 Jan, 2019 09:11 AM

 

Published : 21 Jan 2019 09:11 AM
Last Updated : 21 Jan 2019 09:11 AM

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’- ஜீவகாருண்ய நெறிகளை போதித்த அருட்பிரகாச வள்ளலார்; வடலூர் சத்திய ஞான சபையில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823-ம்ஆண்டு ராமையா, சின்னம்மை தம்பதியருக்கு பிறந்தவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள். வள்ளலாருக்கு சபாபதி, பரசுராமன் என்ற சகோதரர்களும், சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற 2 சகோதரிகளும் இருந்தனர். ஆன்மிக தேடலில் தன்னை கரைத்துக் கொண்ட வள்ளலாருக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலால் தனது சகோதரி உண்ணாமுலை அம்மையின் மகள் தனகோடியை மணந்து, மனைவியையும் ஆன்மிக வழியில் ஈடுபடுத்தினார்.

சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக்கணக்கான அருட்பாடல்களை அருளியுள்ளார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய அவர் நமக்காக அருளிய பாடல்கள் திருவருட்பா என்று போற்றப்படுகின்றன.

ஜீவகாருண்ய நெறிகளையும், வாழ்வியல் தத்துவங்களையும் மக்களுக்கு போதித்தார் வள்ளலார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் 1867-ல் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். நமது ஸ்தூல உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் சத்திய ஞான சபையும் எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப்புறம் சிற்சபையும், பஞ்சபூதங்களைக் குறிக்கும் 5 படிகளையும் காணலாம். அவற்றைகடந்து உள்ளே சென்றால் சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்கு பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடியையும் காணலாம். கண்ணாடியை மறைக்கும் வண்ணம் 7 நிறங்களைக் கொண்ட 7 திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்த திரைகளை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் எனப்படுகிறது.

இந்த ஜோதி தரிசனத்தை 1872-ல்தைப்பூச தினத்தில் சத்திய ஞான சபையில் வள்ளலார் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூச தினத்தில் மட்டுமே 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காணலாம். மாத பூசங்களில் 6 திரைகள் மட்டுமே விலக்கப்படும்.

7 வண்ண திரைகளின் தத்துவம்

கருப்புத்திரை - மாயையை விலக்கும் (அசுத்த மாயாசக்தி), நீலத்திரை - உயர்ந்த நோக்கத்துக்கு ஏற்படும் தடையை விலக்கும் (சுத்த மாயாசக்தி), பச்சைத்திரை - உயிர்களிடம் அன்பு, கருணையை உண்டாக்கும் (கிரியாசக்தி), சிவப்புத்திரை - உணர்வுகளை சீராக்கும் (பராசக்தி), பொன்னிறத்திரை - ஆசைகளால் ஏற்படும் தீமைகளை விலக்கும் (இச்சாசக்தி), வெள்ளைத்திரை - ஞானசக்தி, 6 வண்ணங்களும் இணைந்த திரை- உலக மாயைகளை விலக்கும் (ஆதிசக்தி).

நமது பவுதிக உடலில் இருக்கும் உயிரை ஆன்மா என்று அழைக்கிறோம். நமது உடல் அணுக்களால் ஆனது. இது மிகவும் பிரகாசம் உடையது. கால்பங்கு பொன் நிறமும், முக்கால் பங்கு வெண்மை நிறமும் கொண்டது. இந்த ஆன்மா பிரகாசத்தை மாயா சக்திகளான 7 திரைகள் மறைக்கின்றன. அந்த திரைகளை நீக்கினால் நாம் முழுமையான ஞானம் பெற முடியும். இந்த தத்துவத்தைத்தான் ஞானசபையில் 7 திரைகளை நீக்கிய பிறகு ஜோதியை தரிசிக்கும் நிகழ்ச்சி உணர்த்துகிறது.

மேலும், ஏழை எளிய மக்கள் பசியை போக்க சத்திய ஞான சபை அருகிலேயே தர்ம சாலையை நிறுவினார். இந்த தர்ம சாலையில் அடுப்பு அணையாமல் அன்று முதல் இன்று வரை 3 வேலையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

‘‘கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்; புலால் உண்ணக் கூடாது; எந்த உயிரையும் கொல்லக் கூடாது; சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கூடாது; இறந்தவர்களை எரிக்கக் கூடாது; சமாதி வைத்தல் வேண்டும்; எதிலும் பொது நோக்கம் வேண்டும்; பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்; சிறு தெய்வ வழிபாடு, அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது; உயிர்களை துன்புறுத்தக்கூடாது; மதவெறி கூடாது’’ ஆகியவை வள்ளலாரின் கொள்கைகளாகும்.

நாம் யார்? நம் நிலை எப்படிப்பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எவ்வாறு அழியாத தேகத்தை பெற்று நித்ய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனைஅடையும் வழியை கண்டறிந்தார் வள்ளலார். தாம் கண்டு அடைந்த வழியை நாம் எல்லோரும் பெறவே வள்ளல் பெருமானால் ஏற்படுத்தப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும்.

இப்படி வாழ்ந்த வள்ளலார் வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில் சித்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வொருவருடமும் பூச நட்சத்திரத்தன்றுதைப்பூச திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதன்படி வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச தினத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

ஜோதி காட்டப்படும் நேரங்கள்

இன்று (ஜன.21) தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடக்கிறது. காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (ஜன.22) காலை 5.30 மணி 7 திரைகள் விலக்கி ஜோதி காட்டப்படும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்துள்ளனர். பல இடங்களில் அன்னதானம் நடக்கிறது.

உயிர்களிடம் அன்பு செய்; பசி போக்கு; தயவு காட்டு; மனதாலும் தீங்கு நினைக்காதே என்ற வள்ளலாரின் சிந்தனைகளும், கண்ணோட்டமும் பரவினால் மனித மனங்களும், அதனால் உலகும் செழுமையடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x