Last Updated : 20 Jan, 2019 09:09 AM

 

Published : 20 Jan 2019 09:09 AM
Last Updated : 20 Jan 2019 09:09 AM

தினமும் சராசரியாக 600 அழைப்புகள்: கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தேவையற்ற அழைப்புகள்; அலைக்கழிக்கப்படும் தீயணைப்பு படை வீரர்கள்

தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தேவையற்ற முறையில் விரும் அழைப்புகளால் தீயணைப்பு படை வீரர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டாலும், வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், கட்டிட இடிபாடுகள், வெடி விபத்துகள், ரயில் விபத்துகள், தொழிற்சாலைகளில் வாயு கசிவு, நீர் நிலைகளில் மனிதன் உட்பட உயிரினங்கள் மூழ்கினாலும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். அதன்படி மீட்பு பணிகளில் ஈடுபட தமிழகம் முழுதும் 324 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் உள்ளன. சென்னையில் 39 நிலையங்கள் செயல்படுகின்றன. பொது மக்களிடமிருந்து அழைக்கப்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் ‘101’ அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மீட்புப் பணிக்காக சென்னையை பொருத்தவரை தினமும் சராசரியாக 600 அழைப்புகள் விடுக்கப்படுகின்றன. ஆனால், அதில் 20 முதல் 25 அழைப்புகள் மட்டுமே பாதிப்பு தொடர்பான அழைப்புகள் எனவும் மீதமுள்ள அழைப்புகள் அனைத்தும் தேவையற்ற அழைப்புகள் எனவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, "மீட்புப் பணிகள் தொடர்பான அழைப்பு வந்த அடுத்த வினாடியே செயலில் இறங்க தீயணைப்பு படை வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதற்காக அனைத்து வீரர்களும் சுழற்சி முறையில் தயார் நிலையில் உள்ளனர். தினமும் சுமார் 600 அழைப்புகள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வருகிறது. அதில், பெரும்பாலான அழைப்புகள் உண்மைக்கு மாறானதாக உள்ளன. பலர் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை, உறவினரை காணவில்லை, எதிர் வீட்டுக்காரர் என்னிடம் தகராறில் ஈடுபடுகிறார் என்பதுபோன்ற விஷயங்களைப் பேசுகின்றனர். சிலர் மது அருந்திவிட்டு தகாத முறையில் பேசுகின்றனர்.

எங்களை அழையுங்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பதாக நினைத்து பலர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து விடுகின்றனர். இன்னும் சிலரோ வீட்டு முன் உள்ள சிறிய அளவிலான குப்பைகளுக்கு அவர்களே தீ வைத்து விட்டு எங்களை அழைக்கின்றனர். ஒரு வாளி தண்ணீரை ஊற்றினால் அதுவே அணைந்து விடும். அப்படிச் செய்யாமல் எங்களை அழைக்கின்றனர். இதனால், எங்களது உழைப்பு வீணாகிறது. இந்த நேரத்தில் உண்மையான தீ விபத்து ஏற்பட்டால் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே, மீட்புப் பணிக்காக மட்டும் பொது மக்கள் எங்களை அழையுங்கள். தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்" என்றனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, “தீயணைப்பு படை வீரர்களின் பணி மகத்தானது. அவர்களை தேவையற்ற முறையில் பலர் அழைப்பது வருத்தம் அளிக்கிறது. இப்படி அழைப்பவர்களை நேரில் அழைத்து எச்சரிக்கலாம். வேறு எதுவும் செய்ய சட்டத்தில் இடம் இல்லை. மிரட்டல் விடுத்தாலோ, ஆபாசமாக பேசினாலோ மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தீயணைப்பு படை வீரர்களின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x