Published : 24 Dec 2018 11:40 AM
Last Updated : 24 Dec 2018 11:40 AM

தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை

தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25.35 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், விபத்துகள் அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.

விதிகளை மீறும் ஓட்டுநர்களின் உரிமத்தை  ரத்து செய்தல், அதிக விபத்துகள் நடக்கும் இடங்களைத்  தேர்வு செய்து, கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையில் 59,277 பேர் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டில் இதே மாதத்தை  ஒப்பிடும்போது 25.35 சதவீத உயிரிழப்பு குறைந்துள்ளதாக தமிழக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.

தொடர் நடவடிக்கை இதுதொடர்பாக தமிழக போக்குவரத்துத்  துறை ஆணையர் சி.சமயமூர்த்தி கூறியதாவது:

‘‘தமிழ்நாட்டில் சாலை விபத்து மற்றும் இறப்புகளைக் குறைக்க தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சாலை விபத்து மற்றும் இறப்புகளின் புள்ளிவிவரங்கள் குறித்து ஆய்வுக்  கூட்டம் நடத்தப்படுகின்றன.

சாலைப் பாதுகாப்பு நிதி மூலம் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விதிமுறைகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளைத்  தொடர்ந்து எடுத்து வருகிறோம்.

விபத்து ஏற்பட்டவுடனே காயமடைந்தவர்களை,  கொண்டு வரும்போதே, அவர்களின் நிலையை அறிந்து, உடனடியாக சிகிச்சை அளிக்க அருகேவுள்ள மருத்துவமனைகளிலும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால் சாலை விபத்தில் உயிரிழப்பு 25.35 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உட்பட 13 மாவட்டங்களில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

ஒழுங்கு நடவடிக்கை எனவே, விபத்து அதிகரித்துள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சாலை விபத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவும், அதிக விபத்து நடக்கும் இடங்களைத்  தேர்வு செய்து கட்டமைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x