Published : 18 Dec 2018 09:17 AM
Last Updated : 18 Dec 2018 09:17 AM

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான சிலைகள் எங்கே?- மூடி மறைக்கும் அறநிலைய அதிகாரிகள்; வழக்கு விசாரணை நீள்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தகவல்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி லில் 3 சிலைகள் மாயமானது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் உண்மையை சொல்ல மறுக்கின்றனர். இதனால், வழக்கு விசாரணை நீண்டுகொண்டே செல்கிறது என்று சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோயிலுக்கு கடந்த 2004 ஆகஸ்ட்டில் கும்பாபிஷேகம் நடத் தப்பட்டது. அதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டபோது, புன்னைவன நாதர், ராகு, கேது சிலைகள் சேதம் அடைந்திருப்ப தாக கூறப்பட்டது. அந்த சிலைகள் மாற்றப்பட்டு, புதியசிலைகள் வைக் கப்பட்டன. அறநிலையத் துறை சார் பில் இப்பணி மேற்கொள்ளப் பட்டது.

ஆனால், கோயில் சிலைகளை மாற்ற அர்ச்சகர்கள், பக்தர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் 3 சிலைகளும் மாற்றப்பட்டன.

ஆகம விதிப்படி, அகற்றப்படும் பழைய சிலைகளுக்கு பூஜை செய்து, மண்ணில் புதைத்துவிட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், அதிகாரிகள் துணையு டன் 3 சிலைகளும் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு, பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், கோயில் அதிகாரிகளிடம் அறநிலையத் துறை ஆணையர் ஜெயா விசாரணை நடத்தினார். இதில், கோயில்சிலைகள் மாய மானது உறுதிசெய்யப்பட்டது.

சிலைகள் மாயமானது குறித்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

சிலைகள் மாயமான காலகட் டத்தில் அறநிலையத் துறை ஆணையராக இருந்த தனபாலன், ஸ்தபதி முத்தையா, கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகள் (தற்போதைய கூடுதல் ஆணையர்) உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான புன்னைவன நாதர், ராகு, கேது சிலைகள் 1,600 ஆண்டுகள் தொன்மையானவை. இதுபோன்ற புராதன சிலைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு இருக்கிறது. எனவே, இந்த சிலை களை வெளிநாடுகளுக்கு கடத்தி, விற்பனை செய்திருக்க வாய்ப்பு உள்ளது.

புராதனமான இந்த சிலைகளை அகற்ற, கோயிலில் இருந்த பரம் பரை அர்ச்சகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களை பணியில் இருந்து நீக்கிவிடுவதாக அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

2004-ல் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகளிடம் கேட்டபோது, ‘‘சிலைகள் மாற்றப் பட்டதற்கான ஆவணங்கள் எது வுமே இல்லை. நான் அந்த சிலை களை பார்த்ததே இல்லை. போலீ ஸாரிடம் இருக்கும் ஆவணங்கள் தவறானவை. சிலைகள் மாய மானது பற்றி எனக்கு தெரியாது’’ என்கிறார்.

ஆகம விதிப்படி மண்ணில் சிலைகள் புதைக்கப்பட்டிருந்தால், எந்த இடத்தில் புதைக்கப்பட்டன என்ற விவரம் அறநிலையத் துறை யிடம் இல்லை.

வீடியோ ஆதாரங்கள்

புன்னைவன நாதருக்கு திருப் பணியே நடக்கவில்லை என்று அறநிலையத் துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், புன்னைவன நாதர் சன்னதியிலும் திருப்பணிகள் நடந்ததற்கான வீடியோ ஆதாரங் கள் எங்களிடம் உள்ளன. புன்னை வன நாதருக்கு நடந்த திருப்பணி யில் கோயில் நிர்வாக அதிகாரி யாக இருந்த திருமகள் கலந்து கொண்டதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

எதையோ மறைக்க அல்லது யாரையோ காப்பாற்றுவதற்காக அறநிலையத் துறை அதிகாரிகள் இவ்வாறு கூறுகின்றனர்.

சிலைகள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன என்பது மட்டும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. யாருக்கு விற்றனர், இதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால், அற நிலைய அதிகாரிகள் உண்மையை சொல்ல மறுப்பதால், வழக்கு நீண்டுகொண்டே செல்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x