Published : 15 Dec 2018 09:00 AM
Last Updated : 15 Dec 2018 09:00 AM
சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், சங்கராபுரம் அருகே அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் 5 மாணவிகள் எலி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்துள்ளது அரசம்பட்டி கிராமம். இங்குள்ள அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பில் 35 மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.
இருபாலர் பயிலும் இப்பள்ளியில், மாணவிகள் சிலரை மற்ற மாணவர்களுடன் தொடர்புபடுத்தி, ஒரு சில மாணவர்கள் வகுப்பறை கரும்பலகையில் கிண்டல் செய்து எழுதினர். கடந்த 12-ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.
இதைக் கண்ட மாணவிகள் 5 பேர் மனமுடைந்து, பள்ளியின் இடைவேளையிலேயே வீட்டுக்குச் சென்று எலி மருந்தை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுக்கவும், பெற்றோர் அவர்களை சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் 5 பேருக்கும் வயிற்றுவலி, வாந்தி ஏற்படவும், பெற்றோர் அவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரவில் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் - முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 மாணவிகளும் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சங்கராபுரம் போலீஸார் மற்றும் சமூக நலத்துறை வட்டடாட்சியர் விஜய பிரபாகரன் ஆகியோர் தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT