Published : 13 Dec 2018 10:01 AM
Last Updated : 13 Dec 2018 10:01 AM

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க நாளை வரை தடை: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நாளை வரை (டிச.14) எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் தமிழக அரசையும், தமிழக அரசின் இலவச திட்டங்களையும் விமர்சித்துள்ளதாகவும் எனவே, ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேவராஜன் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி ஜி.கே.இளந்திரையனிடம் விசாரணைக்கு வந்தபோது, மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘‘சர்கார் பட விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ என கோரினார். ஆனால் அரசு தரப்பில் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை ஏற்க ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்து விட்டார்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த டிச.8-ம் தேதி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று நடந்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தனும் அரசு தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாசும் ஆஜராகினர். அப்போது அரசு தரப்பில் இந்த வழக்கில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகவுள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது.

அதையடுத்து இந்த வழக்கை நாளைக்கு (டிச.14) தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என போலீஸாருக்கு உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x