Published : 11 Dec 2018 07:46 PM
Last Updated : 11 Dec 2018 07:46 PM

பயணிகள் தவறவிட்ட 40 சவரன் நகை: கண்டுபிடித்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர், காவலர்களுக்கு ஆணையர் வெகுமதி

தி.நகரில் பெண் பயணிகள் ஆட்டோவில்  தவறவிட்ட சுமார் 40 சவரன் தங்கநகைகள்  அடங்கிய பையை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்து ஒப்படைத்த போலீஸார் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை  சென்னை காவல்  ஆணையாளர்  நேரில்  அழைத்து  பாராட்டினார்.

சென்னை, மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவில் வசிப்பவர் சாரா காத்தூன் (53) மற்றும் தாஷிப் ஜஹான்(53) இவர்கள் தங்களது சுமார் 40 சவரன் தங்க நகைகளை மாற்றுவதற்காக ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு நேற்று மாலை வீட்டிலிருந்து தி.நகர் சென்றனர்.

அங்கு விற்பனைக்கு சரியான விலை வராததால் தங்கநகைகளை மாற்ற முடியாமல், அதே நகைகளுடன் தி.நகர் போத்திஸ் எதிரிலுள்ள ஆட்டோவில் ஏறி மண்ணடியிலுள்ள தங்களது வீட்டிற்கு திரும்பினர். பின்னர் சாரா காத்தூன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தாங்கள் கொண்டு சென்ற தங்க நகைகள் அடங்கி பையை மட்டும் ஆட்டோவில் மறந்து விட்டது தெரியவந்தது.

உடனே, சாரா காத்தூன் இது குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவலர் பரசுராமன் மற்றும் வினோத்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அதில் ஆட்டோவின் எண் சரியாக தெரியாததால், காவலர்கள் பரசுராமன் மற்றும் வினோத்குமார் நகையைப் பறிகொடுத்தவர்கள் ஆட்டோ ஏறிய தி.நகர் போத்தீஸ் எதிரிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள நபர்களிடம் சிசிடிவி கேமரா காட்சிகளை காண்பித்து விசாரணை நடத்தினர். பயணிகள் தங்கநகைகளை மறந்து விட்டுச் சென்ற ஆட்டோவின் ஓட்டுநர் செங்குன்றத்தைச் சேர்ந்த தர்மராஜ் (28)  என்பது தெரியவந்தது.

உடனடியாக, காவலர்கள் பரசுராமன் மற்றும் வினோத்குமார் ஆட்டோ ஓட்டுநர் தர்மராஜை செல்போனில் தொடர்பு கொண்டு தகவலை சொன்னபோது, தர்மராஜ் தான் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், ஆட்டோவை தெருவில் நிறுத்தியுள்ளதாகவும், உடனே போய் பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

உடனே சென்று ஆட்டோவை பார்த்தபோது, தங்கநகைகள் அடங்கிய பை ஆட்டோவின் பின் சீட்டில் பத்திரமாக இருந்துள்ளது. அதை எடுத்துவந்து போலீஸாருக்கு தர்மராஜ் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக காவலர்கள் பரசுராமன் மற்றும் வினோத்குமார் செங்குன்றத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் தர்மராஜின் வீட்டிற்கு சென்று 40 சவரன் தங்கநகைகள் அடங்கிய பையை பெற்று விசாரணை நடத்தினர்.

பின்னர் ஸ்டேஷனுக்கு நகைப்பையை கொண்டுவந்த போலீஸார் அதை புகார்தாரர் சாரா காத்தூனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி பயணிகள் தவறவிட்ட தங்கநகைகள் அடங்கிய பையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த காவலர்கள் பரசுராமன் காவலர் வினோத்குமார் ஆட்டோ ஓட்டுநர் தர்மராஜ் ஆகியோரை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x