Published : 10 Dec 2018 08:51 AM
Last Updated : 10 Dec 2018 08:51 AM
கூட்டணியில் நாங்கள் இருப்பது ஆயிரம் யானை பலத்துக்கு சமம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ, திமுக எம்எல்ஏ கீதாஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. உச்ச நீதிமன்றம் தடுத்தாலும் அதை மீறி அவர்கள் செயல்பட வாய்ப்புள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அந்த நிர்வாகத்துக்கு பக்கபலமாக உள்ளன. ஆலையை திறக்கச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சி வராது. மாநில கட்சிகளின் கூட்டமைப்பு, காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து ஆட்சி அமைக்கும். கூட்டாட்சி தத்துவம் இந்தியாவுக்கு நல்லது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணிதான் வெற்றிபெறும்.
20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுடன் வர வாய்ப்பிருக்கிறது. இதில் 18 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக அணி வெற்றிபெறும். 20 தொகுதிகளில் திமுக அணி வெற்றிபெற்றால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். பொதுத்தேர்தல் வைக்காமலேயே திமுக ஆட்சிக்கு வந்துவிடும். பொங்கலுக்கு பிறகு தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ பேசும்போது, “இயல்பாகவே என்னிடம் தீண்டாமை மற்றும் சாதி உணர்வு இல்லை. பெரியாரை, அண்ணாவை அறிவதற்கு முன்பே கிடையாது. அடுத்த செப்டம்பருக்குள் 66 ஆயிரம் மதிமுக கிளைகள் அமைக்கப்படும். இது திமுகவுக்கு பக்கபலமாக அமையும். மதிமுகவை சேர்ந்த ஒரு தொண்டர் ஆயிரம் பேருக்கு சமம். நாங்கள் உடன் இருப்பது ஆயிரம் யானை பலம் கூட இருக்கிறது என்று அர்த்தம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT