Published : 09 Dec 2018 04:11 PM
Last Updated : 09 Dec 2018 04:11 PM

காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பினார்

கடந்த 6-ம் தேதி முதல் காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட 'பவர் ஸ்டார்' சீனிவாசன், இன்று வீடு திரும்பினார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சீனிவாசன் என்ற ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். இவர் அதற்கு முன்பு 'லத்திகா' என்னும் திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.  'யா யா', 'நாரதன்', 'கோலி சோடா', 'சவுகார்பேட்டை' உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்ப்  படங்களில் நடித்துள்ளார்.

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மற்றும் டெல்லி போலீஸாரால் ஏற்கெனவே  ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.  ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மேலும் சில பண மோசடி வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில்,  தன் கணவர்‘பவர் ஸ்டார்’ சீனிவாசனைக் காணவில்லை என மனைவி ஜுலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி புகார் தெரிவித்தார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர், ஊட்டியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் புகார் வாபஸ் பெறப்பட்டது.

இதன் பின்னணி குறித்து போலீஸார் கூறும்போது, "வீட்டில் யாரிடமும் சொல்லாமால் திடீரென பவர் ஸ்டார் சீனிவாசன் ஊட்டிக்குச் சென்றுள்ளார். விசாரணையை தொடங்கிய சில மணி நேரத்தில் அவர் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவரது மனைவி புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார்" என்றனர்.

'பவர் ஸ்டார்' சீனிவாசன் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை இருந்து வருவதாகவும் பணம் கேட்டு சில மிரட்டல்கள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது .ஊட்டியில் உள்ள நிலத்தை விற்பதற்காகவே 'பவர் ஸ்டார்' சீனிவாசன் சென்றார்  என்றும், அதை விற்றுவிட்டு நண்பருக்கு உரிய கடனை அவர் அடைத்துவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. 

'பவர் ஸ்டார்' சீனிவாசன் ஊட்டியில் இருப்பது தெரியவந்த பிறகு அவரது மனைவி ஜுலி ஊட்டி புறப்பட்டுச் சென்றார். இதனால் அவர் கடத்தப்படவில்லை என்ற செய்தி உறுதியானது.

இந்நிலையில்  கடந்த 6-ம் தேதி முதல் காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட 'பவர் ஸ்டார்' சீனிவாசன், இன்று சென்னையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார்.  விரைவில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x