Published : 09 Dec 2018 01:10 PM
Last Updated : 09 Dec 2018 01:10 PM

சோனியா காந்தி - ஸ்டாலின் சந்திப்பு: மேகேதாட்டு விவகாரம் குறித்து ஆலோசனை

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை இன்று நேரில் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.  கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிழை அளித்ததுடன் மேகேதாட்டு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் சிலை வரும் 16-ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில்  டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் இன்று  சோனியா காந்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று, சிலை திறப்பு விழா அழைப்பிதழினை அவரிடம் அளித்தார். அத்துடன், சோனியா காந்தியின் பிறந்த நாளினை முன்னிட்டு, அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.

வாழ்த்துச் செய்தி

72-வது பிறந்தநாள் கொண்டாடும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு, திமுகவின் சார்பில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கருணாநிதி மீது மாறாத பற்றும் பாசமும்  கொண்ட அவர், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தவுடன் தலைவரின் வேண்டுகோளை ஏற்று, தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கிடும் வண்ணம், செந்தமிழ் மொழியைச்  செம்மொழியே எனப் பிரகடனப்படுத்துவதற்கு மிக வலிமையான அடித்தளம் அமைத்தவர்.

மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்ட அவர், நாட்டின் பொதுநலன் கருதியும், அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவமைப்பு கொடுத்திடும் வகையிலும்,அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பிற்குத் தூண்டுகோலாகவும் உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறார். பிளவுபடுத்தும் பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும், துணிவும், தெளிவும் மிக்க செயல்பாடுகளும் கொண்ட சோனியா, நலமோடும் மகிழ்வோடும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்!”

இவ்வாறு ஸ்டாலின்  வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு,  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கனிமொழி, எம்.பி.,  திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்பின் போது, காவிரியின் குறுக்கே, கர்நாடகா அரசு மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து  சோனியா காந்தியிடமும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடமும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் 2 நாட்கள் தங்கியிருக்கும் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். நாளை நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x