Published : 06 Dec 2018 08:14 AM
Last Updated : 06 Dec 2018 08:14 AM
கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தில் நேற்று `ரயில் பஸ்` சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதை குன்னூர் - உதகை இடையே இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் உதகைக்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ரயில்வே சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுற்றுலா தலமான உதகைக்கு கூடுதலாக `ரயில் பஸ்` சேவை யைத் தொடங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஒரு `ரயில் பஸ்` மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு கடந்த மாதம் கொண்டு வரப்பட்டது. 60 பேர் பயணிக்கக் கூடிய இந்த ரயில் பஸ் பெட்டி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில் இயக்கி பார்க்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் முதல் கல்லார் வரை 8 கிமீ தொலைவுக்கு மலை ரயில் பாதையில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் இதில் உள்ள சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதைச் சீரமைக்கும் பணிக்காக திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
ஏற்கெனவே இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் இருப்புப் பாதையில், குன்னூர் முதல் உதகை வரை இயக்கப்பட உள்ள இந்த ரயில் பஸ்ஸின் இருக்கைகள் உட்பட அனைத்தும் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், மேட்டுப்பாளை யத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடையும் சுற்றுலாப் பயணிகள், குன்னூரில் இருந்து உதகைக்கு இந்த ரயில் பஸ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சாலையில் செல்லும் பேருந்தைப் போலவே இயங்கும் இந்த ரயில் பஸ்ஸின் சோதனை ஓட்டத்தைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT