Published : 06 Dec 2018 07:57 AM
Last Updated : 06 Dec 2018 07:57 AM

நெல் ஜெயராமன் திடீர் மரணம்: புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் துயரம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் காலமானார்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயராமன். அவரது நிலையை உணர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கார்த்தி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் எனப் பலரும் நேரில் சந்தித்தும், அவரது சிகிச்சைக்கு உதவினர்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சென்னைக்கு அழைத்து வந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் உடல் நிலை நேற்று மாலை மோசமடைந்தது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளன.

'நெல்' ஜெயராமன் பின்னணி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியவர் ஜெயராமன். பாரம்பரிய நெல் விதைகளான யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைய கால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனை தனது பண்ணையில் விளைவித்தவர். இதனால் அவர் நெல் ஜெயராமன் என அழைக்கப்பட்டார்.

ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.

நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி, அதனைப் பெற்றுச் செல்லும் விவசாயிகள் தனது நிலத்தில் விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக இலவசமாகவே திரும்பப் பெற்று அதனை புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாகவே சுழற்சி முறையில் வழங்கி வந்தார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியைப் பெருக்கி சந்தைப்படுத்தியதின் மூலம் உலகத்தின் பார்வையை காவிரி டெல்டாவின் பக்கம் திரும்ப செய்த பெருமை நெல் ஜெயராமனுக்கு உண்டு.

நெல் ஜெயராமனின் சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் விருதும், தமிழக அரசு , கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய அமைப்புகள் பல விருதுகள் வழங்கியும் கவுரவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x