Published : 21 Nov 2018 01:46 PM
Last Updated : 21 Nov 2018 01:46 PM

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்: சென்னை வானிலை மையம்

வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:  

''வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக  கடற்கரைப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு  தமிழகத்தில் மழை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் உள் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் 7 செ.மீ. மழையும், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டினம், சென்னை, காஞ்சிபுரம், கும்பகோணம், செம்பரம்பாக்கம் பகுதிகளில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24  மணிநேரத்தைப் பொறுத்தவரை வட தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாகவும், தென் தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடதமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். மீனவர்கள் தமிழக கடற்கரை, தெற்கு ஆந்திரா, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் அதன் புற நகரங்களைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும்''.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x