Published : 21 Nov 2018 12:48 PM
Last Updated : 21 Nov 2018 12:48 PM
'கஜா' புயல் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் நெளிவு சுளிவு காட்டினால் நிதி கிடைக்காது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
'கஜா' புயல் மற்றும் கன மழை காரணமாக நாகை, கட லூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் புயல் நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை அளித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ''புயல் பாதிப்பு நிவாரணப் பணிக்காக மத்திய அரசிடம் நெளிவு சுளிவு காட்டினால் நிதி கிடைக்காது. தைரியமாகக் கேட்டால்தான் தேவையான நிதி கிடைக்கும்.
தமிழக அரசின் நிவாரணப் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம் என்பதை நிரூபிக்கவே திமுக ரூ.1 கோடி நிதியை வழங்கினோம். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலில் சென்று ஆறுதல் கூறியவர் ஸ்டாலின். பாதிக்கப்பட்ட இடத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு திமுக உறுதுணையாக இருக்கும்'' என்றார் துரைமுருகன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT