Published : 21 Nov 2018 12:21 PM
Last Updated : 21 Nov 2018 12:21 PM
'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.1 கோடிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதாக தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பாக ஒரு கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்.
இதற்கு மற்ற மாவட்ட மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்கலாம். குறிப்பாக நிவாரணப் பொருட்களான உணவுப் பொருட்கள் அரிசி, பிரட், பால் பாக்கெட், குடிதண்ணீர் பாட்டில், தென்னைக் கன்று, வாழைக் கன்று, குடம், சேலை, வேஷ்டி, போர்வை, துண்டு, கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அந்தந்த மாவட்டத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும்.
தேமுதிக நிவாரணப் பணியின் முதல் கட்டமாக திருவாரூர், நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (20.11.2018) நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கினோம். மீண்டும் இரண்டாம் கட்டமாக தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் போன்ற பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக மக்களைச் சந்தித்து தேமுதிக சார்பில் ஓரிரு நாட்களில் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT