Published : 19 Nov 2018 09:56 PM
Last Updated : 19 Nov 2018 09:56 PM

தருமபுரி குற்றவாளிகள் 3 பேர் விடுதலையில் காட்டிய தீவிரம் 7 பேர் விடுதலையில் இல்லாமல் போனது ஏன்?- ஸ்டாலின் கேள்வி

ஆளுநரிடம் தங்களுக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி 3 அதிமுகவினரை விடுதலை செய்தவர்கள் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தாதது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் ஆயுள் தண்டனை குற்றவாளிகளான அதிமுகவினர் மூவரை, ஆளுநரின் ஒப்புதலோடு,  தமிழக அரசு  இன்று வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்திருப்பதும்,  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கும் சட்ட வாய்ப்புகள் உரிமைகள் அதிகம் இருந்தும் அவர்கள் விடுதலையை தாமதிப்பதும்; பாரபட்சமானதும், அரசியல் தன்மை மிக்கதும், அநீதியானதுமாகும். அதிமுக அரசின் இந்த ஓரவஞ்சனைச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த 2000-ஆவது ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதால், சென்னை சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அதையொட்டி, அதிமுகவினர் தமிழகம் முழுக்க கலவரங்களில் ஈடுபட்டார்கள்.

அப்போது கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் தருமபுரிக்குக் கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர். வன்முறையாளர்கள் அந்த மாணவிகள் சென்ற பேருந்துக்குத் தீ வைத்ததில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமா என மூன்று மாணவிகள் கொழுந்துவிட்டெரிந்த தீயில் கதறக்கதறக் கருகி மிகப் பரிதாபமான நிலையில் உயிரிழந்தனர். இந்தியாவின் ரத்தத்தையே உறைய வைத்தது இந்த கொடூரமான சோக நிகழ்வு.

இந்த வழக்கில்  கைதான அதிமுக பிரமுகர்கள் மாது, நெடுஞ்செழியன், முனியப்பன் என மூவருக்கும் எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. ஆயுள் தண்டனைக் கைதிகளாக அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த மூவரையும் முன்கூட்டியே   விடுதலை செய்ய கடந்த  நவம்பர் மாதம் ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், அதை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், தேக்கம் ஏற்பட்டது.

ஆயுள்தண்டனைக் கைதிகளை மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற அரசியல்சாசன உரிமை பொதிந்துள்ள 161 -வது பிரிவைச் சுட்டிக்காட்டி, மூவரையும் விடுவிக்க மீண்டும் ஆளுநருக்கு  தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்நிலையில்தான் ஆளுநரின் ஒப்புதலோடு தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் மூவரும் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதே உரிமையின் படியேதான் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கிறார்கள். திமுகவும் இதே கோரிக்கையை  தமிழக அரசிடம் வலியுறுத்தியது. இவர்கள் விடுதலை தொடர்பாக, “ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை ஏற்று செப்டம்பர் 9-ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், இன்றுவரை ஆளுநர் அது குறித்து முடிவெடுக்காமலும் அதற்கான காரணத்தை வெளியிடாமலும் தாமதித்து வருகிறார். அமைச்சரவைத் தீர்மானத்தின் படி, ஏழு பேர் விடுதலை உத்தரவில் கையெழுத்திடுங்கள் என்று சொல்லக்கூடிய துணிச்சல் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இன்றுவரை துளியும் இல்லை. துணிச்சல் இல்லையா அல்லது மனம் இல்லையா என்று தெரியவில்லை.

சும்மா ஒப்புக்கு ஒரு வெற்றுத் தீர்மானம் போட்டு அனுப்பி விட்டு, ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ வலியுறுத்தாமல் இருக்கிறார்களே ஏன் என்ற சந்தேகமும் தவிர்க்க முடியாதது. நீட்  தேர்வுக்கு விலக்குக் கேட்டு ஒரு தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி விட்டு, அதுபற்றிக் கண்டு கொள்ளாமல் இருப்பது போல், வெள்ள நிவாரண உதவி கேட்டுக் கடிதம் அனுப்பி விட்டு, உரிய நிதியைப் பெற எந்த முயற்சியும் எடுக்காதது போல், மாநில உரிமைகளைப் பறிக்கும் நிதி ஆயோக் முடிவுகளை எதிர்க்காமல் இருப்பது போல, இதிலும் ஏனோதானோ என்றமுறையில் பட்டும்படாமல், வழுக்கலான வகையில் நடந்து கொள்கிறது எடப்பாடி அரசு.

ஆயுள் தண்டனைக் கைதிகளான இவர்களை முன் விடுதலை செய்யும் உரிமை மாநில அரசுக்கு இருந்தும் ஆளுநரிடம் உரிய முறையில் எடுத்துச் சொல்லி இரண்டுமூன்று தடவை வலியுறுத்தி எழுவரையும் விடுதலை செய்யாமல் தாமதிப்பது இவர்களின் விடுதலையில் ஆளும் அதிமுக அரசுக்கு சிறிதும் அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது.

ஏறத்தாழ 27 ஆண்டுகளாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அமைச்சரவையின் முடிவு; அந்த முடிவை நிறைவேற்றும் அடிப்படைப் பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. ஆளுநரிடம் தங்களுக்குள்ள நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தித் தேவையானவற்றைக் கேட்டு சாதித்துக் கொள்ளும் அதிமுக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் உடனே விடுதலை செய்ய  வேண்டும்.” இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x