Published : 17 Oct 2018 10:01 PM
Last Updated : 17 Oct 2018 10:01 PM

கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம், தண்ணீர் லாரி உரிமையாளர் ஸ்டிரைக் வாபஸ்

அமைச்சர், அரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டமும், தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 3-ம் தேதி நிலத்தடி நீர் எடுப்பதற்கு தடை விதித்தது. சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கத் தடை விதித்தும், வணிகப் பயன்பாட்டுக்காக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்தக் கோரியும் உத்தரவிட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியில் 4,100 லாரிகள் ஓடவில்லை. முறையான அனுமதி கொடுக்க வேண்டும், தண்ணீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும், வாரியம் அமைக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் சென்னையில் குடியிருப்புகள், பல ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகம் தண்ணீர் தட்டுப்பாட்டால் இன்று இழுத்து மூடப்பட்டது. இதே போன்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் நேற்றுமுதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினர். சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை செயலாளர், குடிநீர் மேலாண்மை இயக்குநர், மற்றும் அதிகாரிகள் சார்பில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதை அடுத்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இது தொடர்பாக கிரேட்டர் தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முரளி கூறுகையில்,  அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்தது.  நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டு அரசு நல்ல வழிவகை செய்யும் என்று நம்புகிறோம்.  அனைத்து குடிநீர் நிறுவனங்களுக்கும் உரிமம் வரும் என்ற நம்பிக்கையில்,  மக்களின் சிரமத்தைப் புரிந்துகொண்டு, அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்'' என்றார்.

இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி நிஜலிங்கம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x