Published : 17 Oct 2018 05:45 PM
Last Updated : 17 Oct 2018 05:45 PM
லீனா மணிமேகலை விவகாரத்தில் சுசிகணேசனுக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சுசி கணேசன் மிரட்டியதால் இனி தீவிரமாக லீனாவை ஆதரிப்பேன் என சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மீ டூ விவகாரத்தில் லீனா மணிமேகலை இயக்குநர் சுசிகணேசன் குறித்துப் பதிவு செய்ய, இதனால் பொங்கி எழுந்த சுசிகணேசன் அதற்கான மறுப்பை தெரிவித்து வழக்குப் பதிவும் செய்துள்ளார். இனி தன் வாழ்நாளில் பெண் இயக்குநர்களை பணிக்கு அமர்த்தமாட்டேன் என்று தெரிவித்துள்ள அவர் லீனா மணிமேகலை மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க உள்ளார்.
இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே பல்வேறு விவகாரங்களில் தனது கருத்தை ஆணித்தரமாக பதிவிட்டு வரும் நடிகர் சித்தார்த் மீ டூவையும் ஆதரித்து பதிவிட்டு வருகிறார். லீனா மணிமேகலைக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த சித்தார்த் இந்நிலையில் லீனா மணிமேகலையை ஆதரித்ததால் தனது தந்தையை சுசி கணேசன் மிரட்டியதாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:
”சுசி கணேசன் எனது தந்தையிடம் வயதானவர் என்றும் பாராமல் தொலைபேசியில் மிரட்டியிருக்கிறார். லீனாவுக்கு நான் ஆதரவு தெரிவித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.
அதனால் இப்போது அனைவருக்கும் ஒரு விஷயத்தைத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இனி லீனா மணிமேகலைக்காக முன்பை விட அதிகமாக துணை நிற்பேன். நல்லதொரு எதிர்ப்பை தெரிவித்திருக்கிறீர்கள். தைரியமாக இருங்கள் சகோதரி” என்று பதிவிட்டுள்ளார்.
மீ டூ இரு பாலினத்தவரிடையே மோதலைத் தாண்டி ஆதரிப்பவர், எதிர்ப்பவர் என்று மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT