Published : 17 Oct 2018 05:03 PM
Last Updated : 17 Oct 2018 05:03 PM
பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதற்காக கல்லூரி மாணவி மீதான இடைநீக்கம் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கோவை அரசுக் கலைக் கல்லூரியில் தேச விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடிய காரணத்திற்காக, அக்கல்லூரியில் வரலாற்றுப் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவி மாலதி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
பகத்சிங் நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர், அவரது வாழ்நாள் பணிகளும், உயிர் தியாகமும் இன்றும் மாணவர் - இளைஞர்களை இயக்கும் சக்தியாக திகழ்ந்து வருகிறது.
ஒரு தேசபக்தனின் பிறந்த நாளைக் கொண்டாடுவது குற்றச் செயலா? அதன் காரணமாக மாணவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த கல்லூரியின் நடவடிக்கை ஜனநாயக அத்துமீறலாகும். மாணவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த கல்லூரி முதல்வரின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மாணவி மாலதி மீதான இடைநீக்கம் நடவடிக்கையை ரத்து செய்து, கல்லூரி முதல்வரின் அத்துமீறல் குறித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT