Published : 17 Oct 2018 03:33 PM
Last Updated : 17 Oct 2018 03:33 PM

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி - தொகுதி பங்கீடு: ஸ்டாலின் பதில்

2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், சட்டப்பேரவை தேர்தல் சேர்ந்து வந்தால் அதனையும் எதிர்கொள்வது குறித்தும் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்திருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய முழு விவரம்:

“திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். வர இருக்கக்கூடிய 2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்து வந்தால் எப்படி அதை சந்திப்பது எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாள்வது என்பது குறித்து அலசி ஆராய்ந்தோம்.

ஏற்கெனவே, திமுகவின் தோழமை கட்சிகளின் நிலைமைகளைப் பற்றியும் பேசியிருக்கிறோம். இதுகுறித்து விரைவில் தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்துபேசி, அதற்குப் பின்னால் திமுக பொதுக்குழுவிலே முடிவு எடுத்து தேர்தல் வருகின்ற நேரத்தில் அதுபற்றி அறிவிப்போம்” என ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கக்கூடிய பணிகள் நடைபெறுகின்றதா?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு அன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்து, அதற்கென்று குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் அறிக்கை முறையாக தயாரிக்கப்படும்.

எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டதா?

எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறோம்.

அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை எப்போது திறக்கப்படுகிறது?

தேதி முடிவு செய்யப்பட்டதற்குப் பிறகு நானே அறிவிப்பேன்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x