Published : 22 Sep 2018 12:11 PM
Last Updated : 22 Sep 2018 12:11 PM

நடிகை நிலானி மீது போலீஸார் வழக்குப் பதிவு

காந்தி லலித்குமார் மரணத்தால் இலக்காக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்த நிலானி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மீது போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி சம்பவம் குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் நிலானி. இவர் காந்தி லலித்குமார் என்பவருடன் பழகி வந்த நிலையில் அவரைத் திருமணம் செய்துகொள்ளவும் இருந்தார். இந்நிலையில் லலித்குமாருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அறிந்து நிலானி விலகினார்.

இதனால் மனம் உடைந்த லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். லலித்குமார் மரணத்திற்கு நிலானி காரணம் என வாட்ஸ் அப் வலைதளங்களில் செய்தி பரவியது. அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. இதையடுத்து நிலானி தலைமறைவானதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனால் மன உளைச்சலடைந்த நிலானி இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை இரண்டு குழந்தைகளைக் கொன்ற அபிராமியுடன் ஒப்பிடுவதா, பெண் பித்தர் என்று தெரிந்தும் 10 வயது மகளை வைத்துள்ள நான் அவருடன் வாழ முடியுமா? எப்படி இப்படியெல்லாம் என்னைப் பற்றி எழுதுகிறீர்கள் என்று கதறி அழுதார்.

எனது இரண்டு பிள்ளைகளுக்காக நான் வாழவேண்டும். அவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது என்னை வாழவிடுங்கள், அவதூறு செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் மன உளைச்சலிலிருந்த நிலானி, காந்தி லலித்குமார் தற்கொலைக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறி இரண்டு நாட்களுக்கு முன் மதுரவாயல் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக நிலானி மீது மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x