Published : 22 Sep 2018 11:38 AM
Last Updated : 22 Sep 2018 11:38 AM

கருணாஸ் பேச்சை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய கருணாஸை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரைத் தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தனது ஆட்கள் கொலையே செய்தாலும் தன்னிடம் சொல்லிவிட்டு செய்யட்டும் என்று பேசினார்.

முதல்வரை தான் அடித்துவிடுவதாக அவர் பயப்படுகிறார் என்று பேசியவர், முதல்வர் சார்ந்த சமூகம் குறித்தும், ஊடகத்துறை இரண்டு முக்கிய சமூகத்தினரிடம் உள்ளது என்றும் பேசி பரபரப்பூட்டினார்.

இந்த விவகாரம் பரபரப்பானது. அவரது பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தன. அவரைக் கைது செய்ய கோரிக்கை எழுந்தது. அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் கண்டித்தனர்.

பின்னர் தனது சர்ச்சைப் பேச்சு குறித்து பேட்டியளித்த கருணாஸ், அமைச்சர் ஜெயக்குமார் கூவத்தூர் பற்றி பேசியதற்கு கண்டித்துள்ளாரே என்ற கேள்விக்கு ‘‘அவர் அரிச்சந்திரன்’’ என்று கூறி கிண்டலடித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு லொடுக்குப் பாண்டியாக இருந்து இப்படி மாறிவிட்டார் என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பதில் வருமாறு:

‘‘நான் அரிச்சந்திரன் என்று கூறியதற்கு நன்றி. லொடுக்குப் பாண்டியாக இருந்து அவர் நாக்கில் சனியாகி விட்டது. அதற்கு என்னென்ன அனுபவிக்கப் போகிறார் என்பதை நிச்சயம் உணர்வார்.

இதுமாதிரி மோசமான, ஒரு கீழ்த்தரமான சட்டப்பேரவை உறுப்பினரை நாடு பெற்றிருக்கிறது என்பது வருத்தப்படக்கூடிய, வேதனைப்படக்கூடிய, கண்டனத்துக்குரிய விஷயம். அனைத்து சமூகத்தையும் அவர் கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி கீழ்த்தரமாகப் பேசுவதை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தப் போக்கு தொடர்ந்தால், இது சமூகத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் விஷயமாக அது இருக்கும். அதனால்தான் அதிமுக சார்பில் கண்டித்தோம். தற்போது வழக்கும் போட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் கருணாஸுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அதிமுக அரசு மீது குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின்’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x