Published : 20 Sep 2018 07:27 PM
Last Updated : 20 Sep 2018 07:27 PM

கருணாஸ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு: ஐபிஎஸ் அதிகாரி பற்றி சர்ச்சைப் பேச்சு

ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை மேடை போட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஐபிஎல் போராட்டம் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின்பேரில் தி.நகர் டிசி அரவிந்தன் உத்தரவின்பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடத்தினார்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் தனது சமுதாயப் பெருமையை பெரிதாகப் பேசிய கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவியைப் பற்றியும் அவர் தான் அடித்து விடுவேன் என்று தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் பேசினார்.

பின்னர் தனது ஆட்களின் வீரப்பிரதாபங்களைப் பேசிய கருணாஸ், ''நீங்கள் எல்லாம் ஒரு ஆளை கொலை பண்ண வேண்டும் என்றால் பத்து ஆட்களை சேர்த்துக்கொண்டு குடித்துவிட்டு இரவு முழுவதும் திட்டமிட்டு பின்னர் கொலை செய்வீர்கள். நாங்கள் தூங்கி எழுந்து பல் தேய்க்கும் நேரத்தில் செய்துவிடுவோம்'' என்று பேசினார்.

பின்னர் ஒரு நாளைக்கு குடிப்பதற்கே ரூ.1 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்த அவர் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுச் செய் என்று தொண்டர்களைப் பார்த்துப் பேசினார். பின்னர் தனது ஆட்களின் காலை ஒடி கையை ஒடி என்று உத்தரவிட்டால் அந்த உத்தரவிட்டவன் காலை ஒடி என்று பேசினார்.

பின்னர் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர் உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம் என்று திரும்பத் திரும்பப் பேசினார். நான் நினைத்திருந்தால் யூனிபார்மை கழற்றியிருப்பேன் என்றெல்லாம் பேசினார்.

இறுதியாக துணை ஆணையர் அரவிந்தனுக்கு எச்சரிக்கை விடுத்த அவர் இதே நிலை தொடர்ந்தால் அதைச் சந்திக்கவும் தயாராக இருப்பதாக கருணாஸ் தெரிவித்தார்.

கருணாஸின் மிரட்டல் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதைக் கண்டித்தார். அதிர்ஷ்டத்தால் எம்.எல்.ஏ ஆனவர் ஆணவத்தால் ஆடுகிறார். விரைவில் அடங்குவார் என்று தெரிவித்தார். பாஜக தலைவர் தமிழிசை கண்டித்தார். அமைச்சர் ஓ.எஸ். மணியன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டித்தனர்.

இந்நிலையில் கருணாஸ் மிரட்டும் வகையில் பேசியது குறித்து நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில் கருணாஸ் மீது கொலைமுயற்சி (307), கொலை மிரட்டல் (506(2)),வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153), இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153(A)(1)(a))பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தூண்டும் வகையில் பேசுவது (504), தனது கருத்தின் மூலம் பொது மக்களுக்குத் தீங்கு ஏற்படும் வகையில் நடப்பது 505(i) பொதுமக்களுக்கு எதிராகவோ மக்களுக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்துவது (b) உள் நோக்கத்துடன் மாற்று சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்கும் வகையில் எதிராகப் பேசுவது(c) தூண்டுவது, உருவாக்குவது (ii), கொலை முயற்சி 307, கொலைமிரட்டல் 506(i) சென்னை மாநகர போலீஸ் சட்டம் அனுமதியை மீறி கட்டுப்பாடுகளை மீறிப் பேசுவது (41(6)(a)(b)(c) MCP Act 1888) குற்றச்சதி (r/w 120(B))IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தவிர கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கும் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போராட்டத்தில் இரண்டு சம்பவங்களின் போது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கீழ்கண்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு 1 : சட்டவிரோதமாக கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் கூடுவது(146) உயிரைப் பறிக்கும் ஆயுதங்களுடன் கூடுவது(148), ரசிகர்களைச் சட்டவிரோதமாக தடுத்தல் (341), அதிகாரிகளின் உத்தரவை மீறிச் செயல்படுவது (188) மற்றும் தடை செய்யப்பட்ட இடத்தில் கூடுவது 41(6)mcp act

வழக்கு 2:  சட்டவிரோதமாக ஒன்றுகூடி செயல்படுவது (147), 148, ரசிகர்களை சட்டவிரோதமாகத் தடுத்தல் (341), ஆபாசமாகப் பேசுதல் 294(b), காயம் ஏற்படுத்துவது (323), ஆயுதத்தை வைத்து காயம் ஏற்படுத்துவது (324), கொலை முயற்சி (307), ஆயுதங்களை வைத்து கொலை மிரட்டல் 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இவர் 9-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x