Published : 19 Sep 2018 03:06 PM
Last Updated : 19 Sep 2018 03:06 PM
தமிழிசை கலந்துகொண்ட கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்துப் பதிலளித்த கமல், அது அரசியல் மாண்பல்ல என்று தெரிவித்தார்.
கடந்த 16-ம் தேதி அன்று சைதாப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தமிழிசை பங்கேற்ற கூட்டத்தில், 'அக்கா ஒரு நிமிஷம் தினம் பெட்ரோல் விலை உயர்கிறது' என்று கேட்டவுடன், அவரை நெட்டித்தள்ளி இழுத்துச் சென்றனர்.
தான் தாக்கப்பட்டதாக ஆட்டோ ஓட்டுநர் கதிர் இன்று பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில் கோவை செல்ல சென்னை விமான நிலையம் வந்த கமல்ஹாசன் இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவைக்கு என்ன பயணம்?
கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொறுப்பாளர்களுக்கான தனி பயிலரங்கம் நடந்து வருகிறது. அரசியல் தெரிந்தவர்கள் அங்கே பாடம் நடத்துகிறார்கள். எங்கள் பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் அது பாடமாக இருக்கும். மற்ற கட்சியினர் ஆலோசனைக் கூட்டமாக நடத்துவார்கள். நாங்கள் கற்கும் நேரமாக பயன்படுத்துகிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது.
சமீபத்தில் தமிழிசை பங்கேற்ற கூட்டத்தில் பெட்ரோல் விலை குறித்து கேட்ட ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளாரே?
விமர்சனம் செய்தால் தாக்குதல் என்பது அரசியல் மாண்பல்ல. விமர்சனம் என்பது அரசியலில் இருக்கக் கூடாது என்பதும், விமர்சனத்திற்குத் தாக்குதல் தான் பதிலாகவும் மாறிக் கொண்டு உள்ளது.
கேள்வி கேட்பார்கள், அதற்குப் பதில் சொல்ல வேண்டும். இந்த மாண்பை தான் காந்தி, பெரியார், அண்ணா சொல்லித் தந்தனர். அவர்கள் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளனர்''.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT