Published : 15 Sep 2018 03:02 PM
Last Updated : 15 Sep 2018 03:02 PM

“சொன்னாலே கேட்டுக்குவோமே! எதுக்கு அடிக்கணும்?”- சுட்டிக் குழந்தை ஸ்மித்திகா பேட்டி

திருப்பூரைச் சேர்ந்த 4 வயது ஸ்மித்திகாவின் காணொலி தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது. வீட்டில் சேட்டை செய்த ஸ்மித்திகாவை அவரது தாய் பிரவீனா கண்டிக்கவே, அப்போது ஸ்மித்திகா மழலை மொழியில், “சேட்டை செஞ்சா அடிக்காதீங்க, குணமா சொன்னா கேட்டுக்குவோம்” என்று பேசும் காணொலியைக் கண்டு பெற்றோர்கள் பலர் சிலாகிக்கின்றனர்.

அழுதபடி அழுத்தமாகப் பேசும் ஸ்மித்திகா வீட்டில் பயங்கர துறுதுறு, சுட்டி. பள்ளியிலும் அப்படியே. பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என அனைவரும் கண்டு வியக்கும் அம்சம், பயம் அறியாமல் மடை திறந்த வெள்ளம் போல் மழலை மொழியில் பேசுவது தான் என்கிறார் அவரது பள்ளி ஆசிரியை.

15 நாட்களுக்கு முன் வீட்டில் யதார்த்தமாக தாய் பிரவீனா எடுத்த காணொலியை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். இதைப் பார்த்த அவரது தோழி ஒருவர் விளையாட்டாகக் கேட்டு, அவரும் ஸ்டேட்டஸ் வைக்க அப்படி ஒவ்வொருவராக கைமாறி இன்றைக்குச் சமூக வலைதளங்களில் சக்கைப்போடு போடுகிறது ஸ்மித்திகாவின் ‘அடிக்காம, குழந்தைகளிடம் குணமா சொல்லுங்க’ காணொலி.

ஸ்மித்திகா குறித்து அவருடைய தாய் பிரவீனா கூறுகையில், “ஸ்மித்திகா வீட்டில் ஒவ்வொரு விஷயமும் பேசும் போதும் அவளைத் திட்டாமல் ஊக்கப்படுத்தினோம். கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தாள். எங்களுக்கு விடை தெரியாமல் இருந்தாலும், அவள் கேள்வி கேட்பதை நாங்கள் நிறுத்தச் சொல்லாததால் வகுப்பில் தனித்து மிளிர்கிறார். அதேபோல் வேலைமுடிந்து வந்ததும் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமராமல் அவளிடம் பேசுவோம். அவள் வகுப்பில் நடந்ததையே சிறுகதை போல் அன்றாடம் சொல்லுவாள். அந்தளவுக்கு ரசித்துச் சொல்வதை அவள் வாயில் கேட்கும்போதே அத்தனை ரசனையாகதாக இருக்கும்” என்றார்.

தந்தை பிரகாஷ் ஆட்டோ ஓட்டுநர். தாய் பிரவீனா பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளி. இவர்களது ஒரே செல்ல மகள் ஸ்மித்திகாவின் 56 வினாடிகள் அழுதபடி ஓடும் காணொலி தற்போது தமிழகமெங்கும் சமூக வலைதளங்களில் வைரல். வாழ்வில் எதிர்பாராத திருப்பம் என்பார்களே அப்படித்தான் இந்த நிகழ்வும் என்கிறார் தந்தை பிரகாஷ்.

ஸ்மித்திகாவிடம் பேசும்போது, “எதுக்கு அங்கிள் கோபப்படணும். குழந்தைகளிடம் சொன்னாலே கேட்டுக்குவோமே. எதுக்கு அடிக்கணும். அதைத்தான் காணொலியில் சொன்னேன்” என்றபடி, “அஜித் மாமாவை பார்க்கச் சென்னை போறேன். அவருகூட பைக்குல போகப்போறேன். அதுக்காக புது டிரெஸ் வாங்கியிருக்கேன். அப்படியே விஜய் டிவியில் ஷூட்டிங்குக்கும் கூப்பிடிருக்காங்க, அங்கயும் போகணும்” என்று புருவத்தை உயர்த்தியபடி செல்லமாகத் தலையாட்டுகிறார்.

பிரவீனா - பிரகாஷ் தம்பதியருக்கு வரும் அலைபேசி மற்றும் அதில் குவிந்து கிடக்கும் வாழ்த்துகளால் அழகாகிறது அந்தச் சிறிய வீடு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x