Published : 13 Sep 2018 02:26 PM
Last Updated : 13 Sep 2018 02:26 PM

பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை கடுமையாகத் தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்: கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெரம்பலூரில் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணை தாக்கி எட்டி உதைத்து கொடுமைப்படுத்திய திமுக முன்னாள் கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

பொதுவாக பெண்களை தாக்கும் அரசியல்வாதிகள் வடமாநிலங்களில் அதிகம் காணலாம். வீக்கர் செக்ஸ் என்று பெண்களை அழைப்பார்கள். பெண்களை தாக்குவது தரக்குறைவாக பேசுவதை சட்டம் கடுமையாக பார்க்கிறது.

சாதாரண ஆண்கள் அவ்வாறு நடப்பதையே கடுமையாக விமர்சிக்கப்படும் காலகட்டத்தில் பொதுவாழ்வில் இருப்பவர்கள் பெண்களை கடுமையாக தாக்குவதும், எட்டி உதைப்பதும் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

திமுக போன்ற முக்கியமான கட்சிகளில் பொதுமக்களை தாக்குபவர்கள் பற்றிய செய்திகள் அதிகரித்து வருகிறது. அதற்கு கட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் பிரியாணி கடை ஒன்றில் ஊழியர்களை கடுமையாக தாக்கியவர்களை கண்டித்த ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கட்சியிலிருந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கடந்தவாரம் செல்போன் கடையில் ஊழியர் ஒருவரை திமுக பிரமுகர் தாக்கியதாக செய்தி வெளியான நிலையில் உச்சக்கட்டமாக பியூட்டி பார்லரில் இளம்பெண் ஒருவரை திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் கடுமையாக எட்டி உதைத்து கீழே தள்ளி தாக்கும் காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பியூட்டி பார்லருக்கு சென்ற திமுக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் செல்வகுமார் என்பவர் பியூட்டி பார்லருக்குள் உள்ள பெண்களை தக்க முனைகிறார்.

கண்டபடி அவர்களை திட்டுகிறார், அறைக்குள் நுழைய முற்படும் அவரை சத்தியா என்ற இளம்பெண் தடுத்து பேசுகிறார், மற்றப்பெண்கள் சமாதானப்படுத்தும் நிலையில் முதலில் தடுத்த இளம்பெண் சத்தியாவை வயிற்றிலேயே எட்டி உதைக்கிறார். நிலை குலைந்த சத்தியா ஓரமாக போய் நிற்கிறார்.

 

 

ஆனாலும் ஆத்திரம் அடங்காத அவர் அந்த இளம்பெண் சத்தியாவை மீண்டும் மீண்டும் உதைக்கிறார். வயிற்றில் திரும்ப திரும்ப உதைக்கப்படும் அவர் நிலைகுலைகிறார், பின்னர் அவரை பிடித்து கழுத்தை நெரித்து கீழே தள்ளுகிறார் செல்வகுமார். கீழே விழுந்த இளம்பெண்ணை மீண்டும் மீண்டும் மிதிக்கிறார். மற்றப்பெண்கள் தடுத்தும் மிதித்துக்கொண்டே இருக்கிறார். இதில் அந்தப்பெண் மயக்கமடைகிறார்.

இந்தச் சம்பவம் நடந்து 4 மாதம் ஆகியும் பெரம்பலூர் டவுன் போலீஸார் சத்தியா புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தவே அதன் சிசிடிவி காட்சியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அது தொலைக்காட்சிகளில், இணையதளங்களில் வைரலாகவே தற்போது இளம்பெண் சத்தியாவை கொடூரமாக தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை பெரம்பலூர் டவுன் போலீஸார் தற்போது கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே திமுக தலைமையகத்துக்கு இந்த தகவல் கிடைக்கவே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சம்பந்தப்பட்ட திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x