Published : 11 Sep 2018 03:10 PM
Last Updated : 11 Sep 2018 03:10 PM

திமுக தலைவர் பதவியை அழகிரிக்கு கொடுத்தால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி பதில்

திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் அழகிரிக்கு கொடுத்தால், தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லி சென்றிருந்தார்.

இன்று டெல்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.

உள்ளாட்சித் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக உங்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதே என்று அமைச்சர் வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி, “திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு கொடுத்திருக்கிறார். முதல்வரும் துணை முதல்வரும் தமிழக அரசை நன்றாக வழிநடத்துகிறார்கள். இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என திமுக பல முயற்சிகள் எடுத்தது. அவை ஒன்றும் நடக்கவில்லை. முதலில், முதல்வர், துணை முதல்வர் மீதும் மனு கொடுத்தார்கள். அதற்குப் பின்னால் வரிசையாக அமைச்சர்கள் மீது மனு கொடுக்கிறார்கள். அந்த வரிசையில் எனக்குப் பின்னால் தான் வருவார்கள் என நினைத்தேன். ஆனால், முன்பே வந்துவிட்டனர்.

நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். ஸ்டாலின் நிர்வகித்த உள்ளாட்சித் துறையை எனக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இந்தத் துறையைச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதிமுகவை முடக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். அதனால்தான் எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை கூறுகின்றனர்.

மு.க.ஸ்டாலின் நிர்வகித்ததை விட உள்ளாட்சித் துறை சிறப்பாக செயல்படுகிறது. கூடுதலான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி அதிகமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக் காலத்தில் மொத்தமாகவே 7 ஆயிரம் கோடி தான் நிதி ஒதுக்கியிருந்தனர். கூடுதலாக குடிநீர் சப்ளை, திடக்கழிவு மேலாண்மை என சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம்.

என்னையும் அமைச்சர் தங்கமணி போன்றவர்களையும் முடக்குவதற்காக இத்தகையை புகார்களைக் கூறுகின்றனர். புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களை மனுவில் பார்த்துதான் எனக்கே தெரியும். என்னுடைய துறையை தவறாகப் பயன்படுத்தி விதிமுறை மீறி டெண்டர்களை யாருக்கும், எந்த நிறுவனத்திற்கும் கொடுக்கவில்லை.

திமுகவினரே பல ஆலைகள் நடத்தியுள்ளனர். சாராய ஆலைகள் கூட நடத்தியிருக்கின்றனர். அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த தவறும் நான் செய்யவில்லை.

உலக பணக்காரர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் பெயர் உள்ளது. ஆர்.எஸ்.பாரதி மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. அதற்கு பொறுப்பேற்று தான் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும், திமுக தலைவர் பதவியையும் அழகிரிக்கோ, துரைமுருகனுக்கோ ஸ்டாலின் கொடுக்கட்டும். அப்படிச் செய்தால் நான் நாளைக்கே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் கட்சிப் பதவியையும் துறந்துவிட்டு அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மட்டும் ஸ்டாலினுக்கு ஏராளமான பினாமி சொத்துகள் உள்ளன. திமுக என்ன செய்தாலும் அதிமுக ஆட்சி தொடரும். கட்சி, ஆட்சி இரண்டையும் முடக்க முடியாது. ஒவ்வொரு துறையிலும் திமுகவை விட 100 மடங்கு அதிகமாகச் செய்துள்ளோம். மத்தியில் கூட்டணியில் இருந்தபோது கூட திமுக இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை” என அமைச்சர் வேலுமணி கூறினார்.

பெண் பத்திரிகையாளருக்கு ஒப்பந்ததாரர் மிரட்டல் விட்டதாக புகார் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வேலுமணி, “நாங்கள் பத்திரிகையாளர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சம்பந்தப்பட்ட பத்திரிகையாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்போம். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x