Published : 11 Sep 2018 01:53 PM
Last Updated : 11 Sep 2018 01:53 PM

எழுவர் விடுதலை; தமிழக அரசின் பரிந்துரையை ஏற்பதுதான் ஆளுநருக்கு இருக்கும் ஒரே வழி: கி.வீரமணி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுவிக்க பரிந்துரைத்திருக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவை ஏற்பதுதான் ஆளுநருக்கு இருக்கும் ஒரே வழி என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு விட்டது. சுமார் 27 ஆண்டுகள் அவர்கள் அனைவரும் சிறைகளில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களை கருணை அடிப்படையில், மனிதாபிமானத்தோடு கூடிய உணர்வை அணுகுமுறையாகக் கொண்டு விடுதலை செய்ய அப்போதையை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு முடிவு எடுத்து, மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.

அவர்கள் அதற்கு இணக்கமாக இல்லாத நிலையில் உச்ச நீதிமன்றத்தினை அணுகிய நிலையில், அது அன்றைய சூழலில் நடைபெறாததாய் ஆகிவிட்டது. சில நாள்களுக்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான அமர்வின் மூலம், ஏழு பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய பரிசீலிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்று கூறியது. இதன்மூலம் பந்து, தமிழக அரசிடம் உள்ளது என்பது தெளிவானது.

ஆளுநரின் அதிகாரம் என்ன?

இந்திய அரசியல் சட்டத்தின் 161-ன் கீழ் தண்டனை அடைந்த குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய ஆளுநருக்குள்ள அதிகாரம் என்பது தனிப்பட்ட முறையில் அவருக்குள்ளது என்று அரசியல் சட்டப்படி கருத முடியாது; கருதவும் கூடாது. அது ஓர் மாநில அரசின் முடிவு. ஆளுநர் மூலம் செயல்படுத்தும் அரசியல் சட்ட முறையை ஒட்டியது. எழுவர் விடுதலை பற்றிய பிரச்சினையில் தமிழக அரசின் அமைச்சரவையே கூடி சட்டப்படி அரசு வழக்கறிஞர் போன்ற சட்டத் தரணிகளோடு அறிவுரை நாடி, முடிவு எடுத்து, பிறகு ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்கள்.

இதனை ஏற்பதுதான் ஆளுநருக்குச் சிறப்பானது என்பது தமிழ்நாட்டில் நளினி தண்டனை குறைப்பு விஷயத்தில் தெளிவாக்கப்பட்டு, முன்னுதாரணமும் ஆகியுள்ளது.

அரசின் கொள்கை முடிவு

இப்படிப்பட்ட அமைச்சரவையின் முடிவு என்பது ஒரு திட்டக் கொள்கை முடிவு என்றே கருதிடவேண்டும். காரணம், இது ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை எடுத்த முடிவினை மேலும் உறுதிப்படுத்தும் இரண்டாவது தடவை முடிவாகும். இதனை அடுத்து தமிழக அரசும், இதனை வரவேற்று கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்கூறும் நல்லுலகத்தின் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.

போற்றத்தக்க ராஜீவ் காந்தி குடும்பத்தினர்

இதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அதனால் நேரிடையாக பாதிப்புக்குள்ளானவர்களான சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியவர்களே அவர்களுக்குக் கருணை காட்டுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது அவர்களது பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மையின் வெளிப்பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் எடுத்துக்காட்டு ஆகும்.

ஆனால், இதையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அவரது காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர்கள் பேசுவது, அறிக்கை விடுவது காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை சேர்க்காது. ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசம் எப்போதும், எங்கும் விரும்பத்தக்கதல்ல. மேலும் அத்தலைவர்களுக்கு பொதுவாக மக்கள் மத்தியில் சேரவேண்டிய பெருமையைக் குறைக்கவே செய்யும்.

தமிழக ஆளுநர் இதில் தமிழக அரசின் அமைச்சரவை முடிவை ஏற்பதுதான் சட்டப்படி அவர் தனது கடமையை கண்ணியத்துடன் செய்தார் என்பதற்கான அடையாளம் ஆகும்.

1. மத்திய அரசு இதனை எதிர்த்து வாதாடிய பிறகும்கூட, உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு பரிசீலித்து முடிவு எடுக்க உரிமை உண்டு என்று தெளிவாகத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுவிட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல முடியுமா?

மேலும் 2013 ஆம் ஆண்டு வரை வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பலவும் அப்படி ஒரு முடிவு கருணை அடிப்படையில் எடுக்கப்பட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டால், அதனை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் எவரும் வழக்குத் தொடுக்கக்கூடும் என்பதற்குக்கூட முன்வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் பரந்து விரிந்த அதிகார உரிமை இல்லை. ஓரளவுக்கு உண்டு. ஆளுநர்கள் தன்னிச்சையாக, சரியானபடி ஆய்வு செய்யாமல், கருணை காட்டி விடுதலை செய்யும் நிலை ஏற்பட்டால் மட்டுமே நீதிமன்றங்களை நாட முடியும் என்பது மட்டுமே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள சட்ட நிலைப்பாடு ஆகும். எனவே, இந்த ஏழு பேர் பிரச்சினையில் அதற்கு வாய்ப்பில்லை. காரணம், அமைச்சரவை இரண்டு முறை விவாதித்த முடிவு இந்தப் பரிந்துரையாகும்.

அடுத்து இதில் கருணை காட்டுவது ஒரு அம்சம் என்றாலும், இதன் மற்றொரு முக்கிய அம்சம்

1. இவ்வழக்கு தடா சட்டத்தின்கீழ் நடைபெற்ற வழக்கு. சரியானபடி விசாரணை தீர்ப்புகள் அமையவில்லை என்று தீர்ப்பு வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ் கூறியுள்ளார்.

2. பேரறிவாளனிடம் கருத்துகளைப் பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராஜன், அந்த பேட்டரியை எதற்காக வாங்கிக் கொடுத்தேன் எனத் தெரியாது என்ற பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றி எழுதி பதிவு செய்தேன் என்று கூறியது நீதிப்போக்கு பற்றிய ஐயத்தை விரிவாகத் தெளிக்கிறது.

27 ஆண்டுகள் சிறைவாசம் - தேவைப்படுவது கருணை

எனவே, இதுவரை ஏழு பேருக்கும் இழைக்கப்பட்ட அநீதி இந்த கருணைமூலம் ஏற்கெனவே தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில், 27 ஆண்டுகள் அவர்கள் சிறையில் கழித்துவிட்ட பிறகு கைதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை, பழிவாங்கும் தத்துவ அடிப்படையில் அமையாது, சீர்திருத்தி நல்வாழ்வு வாழவேண்டியவர்களாக அவர்களை ஆக்கிடுவதே என்ற நவீன தண்டனைத் தத்துவ அடிப்படையிலும்கூட வரவேற்கப்பட வேண்டியதே தவிர, விடுதலையை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது.

காங்கிரஸ் கட்சியினரின் கவனத்துக்கு

இறுதியாக மனவேதனை அடையும், வருந்தும் காங்கிரஸ் மற்றும் விடுதலை செய்யக்கூடாது என்று கூறுபவர்கள் உணரவேண்டிய உண்மை, இவர்களது குற்றம் விடுபட்டது என்பது இதன்மூலம் பொருள் ஆகிவிடாது; கருணை அடிப்படையில்தான் விடுதலை என்பதினால், அந்தத் தீர்ப்பு மாறிவிடவில்லை என்பதும் உறுதியாகிறது” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x