Published : 02 Sep 2018 06:43 PM
Last Updated : 02 Sep 2018 06:43 PM

இடைத்தேர்தலுக்குப் பின் ஓபிஎஸ் கூடாரம் காணாமல் போய்விடும்: டிடிவி தினகரன்

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 இடைத்தேர்தல்களிலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை விட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதிக ஓட்டு பெறும். அப்போது ஓபிஎஸ் கூடாரம் இல்லாமல் போய்விடும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முன்னதாக, சசிகலா சிறைக்குச் சென்றதும் முதல்வராக தினகரன் திட்டம் தீட்டினார். அதனால் என்னிடம் ராஜினாமா செய்ய வேண்டி எழுதி வாங்கினார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மேலும், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலோடு டிடிவி தினகரன் அணி காணாமல் போய்விடும் என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் இன்று நெல்லை, தஞ்சையில் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், ''இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகவா திமுகவுடன் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தார். டெல்லியில் இருந்து உத்தரவு வந்ததும் ஊழல் ஆட்சி என்று சொன்ன அதே ஆட்சியில் துணை முதல்வராக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் குறித்த நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. அவர் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். முதல்வர் பதவியில் இல்லாத விரக்தியில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஓபிஎஸ் பேசி வருகிறார். வரக்கடிய திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 இடைத்தேர்தல்களிலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை விட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதிக ஓட்டு பெறும். அப்போது ஓபிஎஸ் கூடாரம் இல்லாமல் போய்விடும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x