Published : 02 Sep 2018 06:09 PM
Last Updated : 02 Sep 2018 06:09 PM
அதிமுகவில் இருப்பவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வந்துவிடுவார்கள் என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது 2018-ம் ஆண்டின் மிகப் பெரிய ஜோக் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் நாகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சில்லறைக் கட்சிகள் ஒரு மாபெரும் இயக்கத்தை, அந்த இயக்கம் ஆட்சியில் இருக்க, இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறவர்கள் தங்களுடன் வந்துவிடுவார்கள் என்று தினகரன் சொல்வது 2018-ம் ஆண்டின் மிகப் பெரிய ஜோக். தினகரன் கட்சியை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்வதில்லை.
வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்த போது திமுக கூட்டணியில் இருந்தது. அப்போது காவி நிறம் திமுகவுக்குத் தெரியவில்லையா? இன்றைக்குத்தான் தெரிகிறதா? என்று'' அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 31-ம் தேதி நெல்லை சென்ற டிடிவி தினகரன் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவில் இருப்பவர்கள் தங்களுடன் வந்துவிடுவார்கள். அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்துவிடப்படுவார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அனைத்து செயல்பாடுகளும் தோல்வியில் முடிவடையும்'' என்றார்.
இந்நிலையில் தினகரன் கருத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT