Published : 02 Sep 2018 01:37 AM
Last Updated : 02 Sep 2018 01:37 AM

சொத்து வரி சுய மதிப்பீட்டு படிவம் சென்னை மாநகராட்சியில் 4 லட்சம் பேர் மட்டுமே தாக்கல்; படிவம் பூர்த்தி செய்வது கடினமாக இருப்பதாக புகார்

சென்னை மாநகராட்சியில் மொத்த முள்ள 12 லட்சம் சொத்து உரிமையாளர்களில் கடந்த ஒரு மாதத்தில் 4 லட்சம் பேர் மட்டுமே சொத்து வரி சுயமதிப்பீட்டு படிவங்களை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சொத்து உரிமையாளர்களும், தங்களது சொத்து தொடர்பாக சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை ஆகஸ்ட் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

மாநகராட்சியில் மொத்தமுள்ள 12 லட்சம் சொத்துக்களில் 31-ம் தேதி வரை வெறும் 4 லட்சம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த படிவங்களை தாக்கல் செய்துள்ளனர். படிவத்தை தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

மாநகராட்சி வழங்கும் சொத்து சுயமதிப்பீட்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள், கட்டுமானத் தொழில் துறையினர் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை. அந்த படிவத்தில், மொட்டை மாடிப் படி அறை, மின் தூக்கி அறை, கார் நிறுத்துமிடத்தின் அளவுகள் கேட்கப்படுகின்றன. அதை சொத்தின் உரிமையாளர்களுக்கு அளவிடத் தெரியாது. அந்த விவரங்களை குறிப்பிடாமல் தாக்கல் செய்தால், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத படிவம் என அதை ஏற்க மறுக்கவும் வாய்ப்புள்ளது.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மாடிப்படி அறை, மின் தூக்கி அறை ஆகியவை அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொருவரின் படிவத்திலும் அவற்றின் அளவை குறிப்பிடும்போது, அவை அவரவர் சொத்தாக கணக்கிட வாய்ப்புள்ளது. அதனால் மேற்கூறிய இடத்துக்கு ஒவ்வொருவரும் வரி செலுத்த நேரிடும் என சொத்தின் உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர். மேலும் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களின் விவரங்களை தெரிவிக்கும் நிலையில், அதைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. அதனால் பலர் படிவங்களை சமர்ப்பிக்காமல் உள்ளனர். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சொத்தின் உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள விவரங்களை கொடுத்தால் போதும். அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சுய மதிப்பீடு விவரங்களை தாக்கல் செய்தோருக்கு, சொத்து மதிப்பில் கழிவு வழங்கி சொத்து வரி நிர்ணயிக்க இருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு கழிவு அனுமதிக்கப்படாது. 5-15 ஆண்டு வயதுடைய கட்டிடங்களுக்கு 10 சதவீதமும், 15-25 வயதுடைய கட்டிடங்களுக்கு 15 சதவீதமும், 25 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய கட்டிடங்களுக்கு 20 சதவீதமும் சொத்து மதிப்பில் கழிவு வழங்கி, மீதம் உள்ளவற்றுக்கு சொத்து வரி கணக்கிடப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் சுய மதிப்பீட்டு விவரங்களை தாக்கல் செய்யாதோருக்கு கழிவு வழங்கப்படாது. விதிகளை மீறி கட்டியிருந்தாலும், சுய மதிப்பீட்டு விவரத்தில் தெரிவித்து, படிவத்தை தாக்கல் செய்திருந்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். அதை மாநகராட்சி நிர்வாகமே கண்டறிந்தால், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கும் சேர்த்து நடப்பு நிதியாண்டிலிருந்து, அதற்கு முந்தைய 6 நிதியாண்டுகளுக்கு பழைய வரியை விதிக்க மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x