Published : 02 Sep 2018 12:15 AM
Last Updated : 02 Sep 2018 12:15 AM

குமரி சிவன் கோயிலில் 5 சுவாமி சிலைகள், நகைகள் கொள்ளை; அறநிலையத் துறை அதிகாரிகளை பக்தர்கள் முற்றுகை

குமரியில் பிரசித்திபெற்ற திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் 5 சுவாமி சிலைகள், நவரத்தின கற்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சர்வதேச மதிப்பில் இவை ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புடையவை என புகார் கூறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 12 சிவாலயங்களில் ஒன்றாக மார்த்தாண்டத்தை அடுத்துள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயில் விளங்குகிறது. பஞ்சபாண்டவர்கள் வழிபட்டதாக போற்றப்படும் இக்கோயில் திருவிதாங்கூர் மன்னர்களால் பராமரிக்கப்பட்டு, தற்போது அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்கள் கொண்ட புதையல் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி இங்குகண்காணிப்பு கேமரா நிறுவ வேண்டும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குழித்துறை தாமிரபரணி ஆற்றின்கரையில் உள்ள இக்கோயிலுக்கு அருகே  கட்டிடங்கள் மற்றும் வீடுகள் ஏதுமில்லை. இரவில் ஆள்நடமாட்டம் இருக்காது.

இக்கோயில் பூசாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அர்ச்சகர்கள் நேற்று காலை கோயிலுக்கு வந்தபோது,  கோயில் முன்பக்கம் மற்றும் உள்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதுகுறித்து, அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மூலஸ்தான கதவு உடைக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு அறையில் இருந்த நகைகள், ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டிருந்தன. 3 கிலோ மற்றும் 2.5 கிலோ எடை கொண்ட 2 ஐம்பொன் சிவன் சிலைகள், 4 கிலோ எடைகொண்ட விநாயகர் ஐம்பொன் சிலை, 4 கிலோ எடைகொண்ட முருகன் ஐம்பொன் சிலை, செம்பால் ஆன நந்தி பகவான் சிலை ஆகிய 5 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

மேலும், மூலவர் மகாதேவருக்கு அணிவிக்கப்படும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட திருமுகம், வெள்ளி திருமுகம், செம்பு திருமுகம், ஆராட்டு வெள்ளிக்குடை, தங்க மாலைகள், தங்க பொட்டு போன்ற பழங்கால நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மதிப்பில் மாறுபாடு

ரூ.25 லட்சம் மதிப்பிலான சிலைகள், நகைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போயுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனி

னும், சர்வதேச சந்தையில் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் ஓரா உதவியுடன் சோதனைமேற்கொள்ளப்பட்டது. கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.

கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. நாத் உத்தரவிட்டுள்ளார்.இக்கோயிலில் ஐம்பொன் சிலைகளும், பழங்கால நகைகளும் உள்ளதால் கண்காணிப்பு கேமரா நிறுவ வேண்டும், பாதுகாவலர் நியமிக்க வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதனை அறநிலையத் துறை கண்டுகொள்ளவில்லை.

கோயிலை பார்வையிட வந்தஇந்து அறநிலையத் துறை அதிகாரிகளை, பக்தர்கள் முற்றுகையிட்டனர். போலீஸார் தலையிட்டு பக்தர்களை சமாதானம் செய்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x