Published : 29 Aug 2018 07:46 AM
Last Updated : 29 Aug 2018 07:46 AM

ஆஜராகாத தமிழக படகுகளின் உரிமையாளர்கள்;  3 விசைப் படகுகளை நாட்டுடைமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக படகுகளின் உரிமையாளர்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகாததால் 3 தமிழக மீனவர்களின் விசைப் படகுகளையும் நாட்டுடை மையாக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற தேவதாஸ், பிரான்சிஸ் ஆகியோரது இரண்டு விசைப் படகுகளை கைப்பற்றி, அதிலிருந்த 12 மீனவர்களை கடந்த ஜுலை 5-ம் தேதி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் ஜூலை 8-ம் தேதி மண்டபத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகை கைப்பற்றி அதி லிருந்து 4 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

இந்நிலையில், சிறைபிடிக்கப் பட்ட 16 மீனவர்கள் மீதும் இலங்கை அரசின் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஜூலை 13-ம் தேதி ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 16 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையில் ஈடுபட்டது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு, இரண்டு குற்றங்களுக்கும் தனித்தனியே ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் விதிக்கப் பட்ட சிறைத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக் கப்பட்டு மீனவர்கள் 16 பேரை யும் உடனே நாடு கடத்த (இந்தியா வுக்கு திருப்பி அனுப்ப) நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், மேலும் ஆகஸ்ட் 28-ம் தேதி படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறி நீதிபதி ஜூட்சன் வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், செவ்வாய்க் கிழமை தமிழக விசைப்படகு உரிமையாளர்கள் யாரும் ஆஜரா காததால் 3 விசைப்படகுகளையும் நாட்டுடைமையாக்க நீதிபதி ஜூட்சன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x