Published : 24 Aug 2018 05:02 PM
Last Updated : 24 Aug 2018 05:02 PM

நீலகிரியில் மக்களோடு மக்களாக வலம் வந்த பாசக்கார யானை: கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது

நீலகிரி மாவட்டத்தில் மக்களோடு மக்களாக வலம் வந்த ‘மக்னா’ யானை உயிரிழந்தது. அதன் பிரிவு கூடலூர் மற்றும் பந்தலூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

நீலகிரி மாவட்டத்தில் மக்களுக்கு இரு யானைகள் பிரசித்தம். ஒன்று ரிவால்டோ மற்றொன்று மக்னா.

மகிழ்ச்சி அளித்த ரிவால்டோ:

ரிவால்டோ,  மசினகுடி, மாவன்னல்லா பகுதிகளில் தும்பிக்கையில் காயமுடன் வலம் வந்த நிலையில், அதற்கு அப்பகுதி மக்கள் வாஞ்சையுடன் உணவு அளித்ததால், அந்த யானை மக்களுடன் நட்பு பாராட்டி வந்தது. கடந்த ஓராண்டுக்கு மேலாக அடர்ந்த வனப்பகுதிக்கு சென்ற ரிவால்டோ தற்போது மீண்டும் மாவன்னல்லா பகுதிக்கு திரும்பியுள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சோகத்தில் ஆழ்த்திய மக்னா:

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் குதியில் நான்கு ஆண்டு காலமாக தந்தம் இல்லாத ஆண் (மக்னா) யானை வலம் வந்தது. சாலை வழியே வரும் அந்த யானை யாரையும் தொந்தரவு செய்யாது. ஆனால், ஒரு சிலர் அந்த யானையை கல் வீசி துன்புறுத்தினர். இதனால், கோபம் அடைந்த மக்னா ஆட்டோ போன்ற வாகனங்களை தாக்கியது. ஆனாலும், பொதுமக்களை பயமுறுத்தவில்லை. மக்கள் மக்னா யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் அல்லது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

யானை 40 வயதை கடந்துள்ளதால் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வர முடியாது என வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்னாவுக்கு வாதம் நோய் தாக்கி நடக்க முடியாமல் தவித்தது. வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், அதற்கு சிகிச்சை அளித்தார். உடல் நலம் தேறிய மக்னா கேரள வனப்பகுதிக்கு சென்றது.

சில மாதங்களுக்கு பிறகு திடீரென மக்னா மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு திரும்பியது. கேரளாவிலிருந்து பந்தலூர், கூடலூர் நகரப்பகுதிகளை கடந்து ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மகிரி பகுதியில் தஞ்சமடைந்தது. அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் நடமாடத் தொடங்கியது. மக்களை அந்த யானை விரட்டவில்லை. மக்னாவின் அமைதியை பார்த்த மக்கள் அதற்கு தென்னை மட்டை மற்றும் பலாக்காய்களை வழங்கினர். அதை ஆசையோடு உண்ணும் யானை அந்த பகுதியிலேயே முகாமிட்டு வந்தது. இந்த மக்னா யானை பொதுமக்கள் இடையேயான பாசப் பிணைப்பு அந்த பகுதியில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது.

திடீரென உயிரிழந்தது:

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கூடலூர் அருகே உள்ள பாலவாடி குறிஞ்சி நகர் ஆதிவாசி காலனிக்கு வந்த யானை அங்கிருந்த கழிவு நீர் தொட்டி மீது கால் வைத்துள்ளது. அப்போது கழிவுநீர் தொட்டி மூடி உடைந்து யானையின் முன்னங்கால் கழிவுநீர் தொட்டியில் சிக்கி, கீழே விழுந்தது. தவழும் குழந்தையை போன்ற நிலையில் தனது உயிரை பறிக்கொடுத்திருந்தது.

தகவல் அறிந்த ஓவேலி வனச்சரகர் குமார், கால்நடை மருத்துவர் டேவிட் ஆகியோர் இன்று காலை ஜே சிபி உதவியுடன் 3 மணி நேரம் போராடி யானையை கழிவு நீர் தொட்டியிலிருந்து வெளியே எடுத்தனர். யானை விழுந்ததில் நெஞ்சு பகுதி பலத்த காயம் அடைந்திருந்தது யானை நீண்ட நேரம் உயிருக்காக போராடி உள்ளது என்று வனத்துறையினர் கூறினர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் யானை அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. ஓவேலி பகுதி மக்கள் யானைக்கு பிரியா விடை அளித்தனர்.

நீண்ட நாட்களாக மக்களோடு மக்களாக வலம் வந்த யானை இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x