Published : 24 Aug 2018 02:55 PM
Last Updated : 24 Aug 2018 02:55 PM

சென்னையின் புதிய கூடுதல் ஆணையர்கள் பொறுப்பேற்பு: காவல் ஆணையர் வாழ்த்து

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன் இருவரும் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்கள் இருவருக்கும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையில் திமுக தலைவர் மறைந்த மறுநாள் அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி சென்ற பின்னர் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதால் ராகுல் காந்தி பெரும் நெரிசலில் சிக்கிக்கொண்டார்.

நாட்டின் உயரிய எஸ்பிஜி பாதுகாப்பில் இருக்கும் ராகுல் காந்தி அரைமணி நேரம் பாதுகாப்பின்றி ஜனத்திரளில் சிக்கியது பெரும் சர்ச்சையானது. எஸ்பிஜி, மத்திய உளவுத்துறை ரா புகார் அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது. உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை காவல்துறையில் மாற்றம் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில் சென்னையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் சாரங்கன், ஜெயராம் இருவரும் மாற்றப்பட்டனர். தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வாலும், வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக தினகரனும் மாற்றப்பட்டனர்.

கூடுதல் ஆணையர்கள் இருவரும் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர். இருவருக்கும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x