Published : 24 Aug 2018 11:27 AM
Last Updated : 24 Aug 2018 11:27 AM

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி வசீப்தர் தலைமையில் மூவர் குழு - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தமிழக அரசு உத்தரவின்பேரில், மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, வேதாந்தா குழுமம் சார்பில், டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

தமிழக அரசு சார்பில், “வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

நிர்வாக அலுவலகம்

தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வேதாந்தா குழுமத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்ற தமிழக அரசின் வாதத்தையும் நிராகரித்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்படலாம் என்று அனுமதியளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், அதேநேரத்தில் எந்த விதமான உற்பத்தி பணிகளும் கண்டிப்பாக நடைபெறக் கூடாது என உத்தரவிட்டது.

குழு அமைப்பு

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது.

அப்போது, வேதாந்தா குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்படும் குழுவின் தலைவராக கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி நியமிக்கப்படக் கூடாது” என்று வலியுறுத்தினார். இதற்கு தமிழக அரசு வழக்கறிஞரும், மற்றொரு மனுதாரரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, உரிய பெயர்களை பரிசீலனை செய்து குழுவின் தலைவர் யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது. மேலும், இந்த குழுவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். இந்த குழு 6 வாரங்களுக்குள் ஆய்வு பணிகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்கும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் 3 பேர் அடங்கிய குழுவை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு அளித்த உத்தரவு விபரம்:

ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்படும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் செயல்படுவார். இந்த குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்த குழு 2 வாரங்களில் பொறுப்பேற்றுக் கொண்டு, 6 வாரங்களில் ஆய்வுகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த குழு ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யும். மேலும், இது தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் ஆராயும். அதற்கான முழு உரிமை குழுவுக்கு உள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக மனுதாரர்கள் அளித்த ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அந்த பகுதி மக்களின் உணர்வுகள் மற்றும் உண்மை நிலையையும் குழு ஆராயும்.

குழுவுக்கான வசதிகள்

குழுவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து ஒத்துழைப்பையும் மாவட்ட நிர்வாகம் அளிக்க வேண்டும். இந்த குழு சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாய வளாகத்தில் இருந்து செயல்படலாம். அல்லது குழு தலைவர் விரும்பும் எந்த இடத்தில் இருந்தும் செயல்படலாம்.

குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தேவையான தங்குமிடம், போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளையும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செய்து கொடுக்க வேண்டும். மேலும், அவர்களுக்கான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தேவைப்பட்டால் இவ்வழக்கில் மனுதாரர்களான வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் ஆகியோரது கருத்துக்களையும் குழு கேட்டறியலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு அளிக்க உள்ள அறிக்கையின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என, தேசியபசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்திருப்பதால், குழு தலைவர் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x