Published : 20 Aug 2018 02:59 PM
Last Updated : 20 Aug 2018 02:59 PM

ஹெச்.ராஜா மீது கவிஞர் மனுஷ்யபுத்திரன் காவல் ஆணையரிடம் புகார்

தனது கவிதையை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தனக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக ஹெச்.ராஜா மீதும், தன்னை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கவிஞர் மனுஷ்யபுத்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திமுகவைச் சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் இன்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். காவல் ஆணையரிடம் அவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார்.

அவரது புகார் மனு வருமாறு:

“தேனாம்பேட்டையில் அலுவலகம் நடத்திவரும் நான் ஒரு மாற்றுத்திறனாளி ஆவேன். எஸ்.அப்துல் ஹமீது ஆகிய நான் மனுஷ்யபுத்திரன் என்ற பெயரில் கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன்.

சமூகம் சார்ந்த திராவிட இயக்க கருத்துகளை கருத்தரங்குகளில் கலந்துகொண்டு பேசி வருகிறேன். கடந்த 18-ம் தேதி ஊழியின் நடனம் என்ற தலைப்பில் இயற்கை சீற்றம், மழை வெள்ளத்தைப் பற்றி பொதுவான ஒரு பெண்ணை வைத்து வர்ணித்து கவிதை ஒன்றை எழுதி சமூக ஊடகங்களில் வெளியிட்டேன்.

இந்தக் கவிதையில் எந்த ஒரு மதத்தையோ, மதம் சார்ந்த கடவுளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் எழுதவும் இல்லை. ஆனால் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, எனது கவிதையை இந்துக் கடவுளுக்கு எதிரான களங்கம் கற்பிக்கும் கவிதை என தனது ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு காவல் நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்ய அனைவரையும் தூண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, சமூக வலைதள சமூக விரோதிகள் எனது தொலைபேசி எண்ணை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் காரணமாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னுடைய அலைபேசிக்கு நூற்றுக்கணக்கான ஆபாச குறுஞ்செய்திகளும், என்னுடைய உடல் ஊனத்தை கொச்சைப்படுத்தியும் பேசி வருகின்றனர்.

இதனால் எனது உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆகையால் என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஹெச்.ராஜா எனக்கு எதிராக அவதூறு பரப்பி காவல் நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்யத் தூண்டியதால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153, 505-ன் படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு சமூக வலைதள சமூக விரோதிகள் கொலை மிரட்டல், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி எனக்கு உயிருக்கும், உடைமைக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டப்படியும், தொழில்நுட்பச் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.”

இவ்வாறு மனுஷ்யபுத்திரன் புகாரில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x