Published : 18 Aug 2018 12:43 PM
Last Updated : 18 Aug 2018 12:43 PM
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூபாய் 1 கோடி மதிப்பிலான மருந்துப் பொருட்கள் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது என, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சார்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் ரூபாய் 1 கோடி மதிப்பிலான மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களைத் தடுப்பதற்கும், மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கும் 25 லட்சம் டாக்சிசைக்கிளின் மாத்திரைகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள், 5 லட்சம் குளோர்பெனரமின் மாத்திரைகள், 1 லட்சம் களிம்புகள், பிற அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக 6 லட்சம் எண்ணிக்கையிலான கை உறைகள், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக குளோரின் மாத்திரைகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட மொத்தம் ரூபாய் 1 கோடி மதிப்பிலான மருந்துப்பொருட்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், எல்லையோர மாவட்டங்களாகிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகளுக்கு கேரள, தமிழ்நாடு எல்லையோர மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT