Published : 18 Aug 2018 08:44 AM
Last Updated : 18 Aug 2018 08:44 AM
காவிரி ஆற்றில் மாயனூர் பகுதியில் இன்று காலை 3 லட்சம் கன அடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் கரையோர மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
காவிரி கரையோரத்தில் உள்ள தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் பொறுப்பேற்று, மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின் றனர். அமைச்சர்களும் நேரடியாக சென்று ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தற்போது நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் ஆங் காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளை வழங்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்து 22 கனஅடி, கபினி அணையில் இருந்து 68,333 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரத்து 800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
அதேபோல், பவானிசாகர் அணைக்கு வரும் 62,800 கனஅடியில், 65 ஆயிரம் கனஅடியும், அமராவதி அணைக்கு வரும் 9,200 கனஅடியில் 8,100 கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் நீர் அதிக அளவில் வெளியேறுகிறது. நாமக்கல்லில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, நிவாரணப் பணிகளை பார்வையிட்டு வருகிறார். ஈரோடு, திருச்சியிலும் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வைகை வடிநில அணைகளான பெரியாறுக்கு வினாடிக்கு 22,587 கன அடி நீர் வருகிறது. அங்கிருந்து 25,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் தற்போது 66 அடியை எட்டியுள்ளதால், முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,640 பேர் அப் புறப்படுத்தப்பட்டு, 96 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். பல்துறை மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. மீட்புப் படைகளும் தயாராக உள்ளன.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தற்போது மேலும் கூடுதலாக விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஆக 2 லட்சம் கன அடி நீருடன் பவானி, அமராவதி அணைகளில் இருந்து வெளியேறும் நீரும் மாயனூருக்கு இன்று அதிகாலை வந்தடையும். இதன்மூலம் விநாடிக்கு 3 லட்சம் கன அடி நீர் வரும் என எதிர்பார்க் கப்படுகிறது. ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக இல்லை. எனவே, கரையோரம் மற்றும் தாழ் வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கரை பலவீனமாக உள்ள பகுதி களுக்கு மீட்புப்படைகள் அனுப்பப் பட்டுள்ளன. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அணைகளில் இருந்து நீரை பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
வருவாய்த் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT